வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -2

பி.ஜி.எஸ். மணியன்  

இந்த இடத்தில் அந்த காலத்து நாடகக் கலை பற்றி சில தகவல்கள் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தான் எஸ்.வி. வெங்கட்ராமன் போன்றவர்கள் சாதித்ததன் அருமை புரியும்.

அந்த நாட்களில் தெருக்கூத்து என்ற பெயரில் நாடகங்கள் நடந்தன. இரவு முழுவதும் விடிய விடிய அவை நடத்தப்பட்டு வந்தன. "மைக்" வசதி இல்லாத காரணத்தால் கடைசி வரிசையில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேரும் அளவுக்கு சாரீர வசதி நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தேவையாக இருந்தது. ஆகவே வசனங்களை விட பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த நாடகங்களுக்கான கதைகள் நமது இதிகாச புராணங்களில் இருந்தும் கர்ணபரம்பரை கதைகளில் இருந்துமே எடுத்தாளப்பட்டு வந்தன.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்படிப்பட்ட கதைகளே நாடகங்களின் மைய கருத்தாக அமைந்தன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்படிப்பட்ட கதைகளே நாடகங்களின் மைய கருத்தாக அமைந்தன.

ஹரிச்சந்திரா, பவளக்கொடி, வள்ளி திருமணம், சாரங்கதாரா, கோவலன்-கண்ணகி, நந்தனார், பாமா விஜயம் போன்ற கதைகள் நாடகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றன. இவைகள் கோவில் திருவிழாக்களிலும் பண்டிகை தினங்களிலும் விடிய விடிய நடை பெற்று வந்தன. இந்த கதைகள் மக்களிடையே பக்தி, நல்லொழுக்கம், தேசபக்தி, ராஜ விசுவாசம் போன்றவற்றை வளர்த்து வந்தன.

அரசர்கள் நாடக கலைஞர்களையும் இசை வல்லுனர்களையும் பராமரித்து வந்தனர். நடனக்கலை "சதிர்க் கச்சேரி" என்று அழைக்கப்பட்டு வந்தது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல நாடக குழுக்கள் இயங்கி வர ஆரம்பித்தன.மதுரை ஜகன்னாத அய்யர் பாய்ஸ் கம்பெனி, மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபா, ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா, கண்ணையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் ஸ்ரீ தேவி பாலவிநோத சபா, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. வைரம் செட்டியாரின் ஸ்ரீ ராம பால கான வினோத சபா, போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தக்கவை.

இந்த நாடக கம்பெனிகளில் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு மேல் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறுவர்களே ஏற்று நடித்த காரணத்தால் பாய்ஸ் கம்பெனி (Boys Company ) என்று பெயர்.

"வசதியற்ற வறுமைக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், படிப்பு வராதவர்கள், அப்பா அடிப்பார் என்று அஞ்சி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள் - இப்படிப்பட்ட சிறுவர்களுக்கு எல்லாம் அந்தக் கால நாடகக் கம்பெனிகள் புகலிடமாகவும், குருகுலமாகவும் விளங்கின. .........உணவு, தங்குவதற்கு இடம், ஒழுக்கம், கல்வி ஆகிய அனைத்துமே அங்கு அவர்களுக்கு கொடுக்கப் பட்டதால் அந்தக் காலத்தில் பல வசதியற்ற பெற்றோர்கள் அவர்களாகவே விரும்பி வலிய வந்து தங்கள் குழந்தைகளை நாடகக் கம்பெனிகளில் சேர்த்துவிட்டனர்." - என்று அந்தக் காலத்து நாடகக் கம்பெனிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் பிரபல கதை வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் அவர்கள்.

நடிக்க வந்த சிறுவர்கள் கடுமையான பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சங்கீதம், நடிப்பு, வசனம் பேசும் முறை, நிற்பதற்கும், நடப்பதற்கும் கூட பயிற்சிகள், உடற்பயிற்சி, யோகப்பயிற்சி போன்றவை கட்டாயமாக்கப்பட்டன.

கூடவே குருவுக்கு மரியாதை, ஒழுக்கம் போன்றவையும் போதிக்கப்பட்டன. நடிப்பில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் அவர்கள் புடம் போட்டு எடுக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட நாடக கம்பெனிகள் மூலமாக கிடைத்த பொக்கிஷங்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார், எம். ஆர்.ராதா, எம். என். ராஜம், பி.. எஸ். ஞானம், எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, கே. பி. சுந்தராம்பாள், என். எஸ். கிருஷ்ணன், காளி. என். ரத்தினம், டி.கே.எஸ். சகோதரர்கள், டி.ஆர். மகாலிங்கம், கே. பி. காமாட்சி, டி. எஸ். பாலையா, சித்தூர் நாகைய்யா, எஸ்.வி. சுப்பையா, வி.கே. ராமசாமி, ஏ.பி.நாகராஜன், எஸ். வி. சகஸ்ரநாமம், கே.ஏ. தங்கவேலு போன்றவர்கள்.

(இந்தப் பட்டியலில் சிலர் விட்டுப்போய் இருக்கலாம். ஆனால் பொதுவாக ஐம்பதுகளின் துவக்க காலம் வரை திரை உலகில் அறிமுகமான பெரும்பாலான நட்சத்திரங்கள் "பாய்ஸ்" நாடக குழுவிலிருந்து வந்தவர்கள்தான். அவ்வளவு ஏன்? நமது உலக நாயகன் கமலஹாசன் கூட டி. கே. எஸ். சகோதரர்களின் பாய்ஸ் நாடக கம்பெனியில் உருவானவர்தான்.)

இந்த நாடகங்களில் கதாநாயகன் வேடத்துக்கு "ராஜபார்ட்" என்று பெயர். பெண் வேடம் (கதாநாயகி உட்பட) "ஸ்திரீ பார்ட்" என்று குறிப்பிடப்பட்டது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் பெண்கள் மேடை ஏறி நடிக்கவோ, பாடவோ தயங்கிய காரணத்தால் இந்த "ஸ்திரீ பார்ட்" வேடங்களையும் ஆண்களே ஏற்று நடித்து வந்தார்கள்.

ஜெ. சுந்தரராவ், பரமேஸ்வர அய்யர், டி. பி. ராமகிருஷ்ணன், ரங்கசுவாமி அய்யங்கார், கே.எஸ். அனந்த நாராயண அய்யர், பி. எஸ். வேலு நாயர் போன்ற நடிகர்கள் பெண்வேடமிட்டு நடிப்பதில் "ஸ்திரீ பார்ட்" நடிகர்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூட "ஸ்திரீ பார்ட்" நடிகராக நடித்து புகழ் பெற்றவர்தான்.).

இப்படிப்பட்ட நாடக கம்பனிகளில் நடிப்பவர்களுக்கு மாத சம்பளம் நிர்ணயித்து வழங்கப்பட்டு வந்தது. நாடகங்களின் வெற்றி தோல்விகளை பொருத்து இவை தீர்மானிக்க படும். சமயங்களில் நாடகங்கள் சரியாக போகவில்லை என்றால் கம்பனிக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களில் நடிகர்களும் பங்கெடுத்துக்கொள்வது வழக்கம்.

சாதாரணமாக இந்த நாடகங்கள் மாலை ஆறு மணி அளவில் துவங்கி பத்து மணி அளவில் முடிவுறும்.

ஸ்பெஷல் நாடகங்கள் என்று இரவு ஒன்பது மணி முதல் காலை நான்கு மணி வரை நடப்பதும் உண்டு. நாடகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து சில சமயங்களில் மாலை மற்றும் இரவு என்று இரண்டு காட்சிகளாக நடத்தப் படுவதும் உண்டு.

நாடகத்துக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ கதாநாயகனும், நாயகியும் அறிமுகமாகும் காட்சியில் ஏதாவது ஒரு த்யாகராஜ கீர்த்தனையை பாடிக்கொண்டு வருவார்கள். விஸ்தாரமான ராக ஆலாபனை, ஸ்வரங்கள் என்று பாடவேண்டும். அனேகமாக அனைவருக்குமே இனிமையான குரல் வளம் இருந்ததால் ரசிகர்கள் அந்த பொருத்தம் இல்லாத காட்சி அமைப்பை பொருட்படுத்தாமல் கரகோஷம் செய்து ரசிப்பார்கள். (சமயத்தில் "ஒன்ஸ் மோர்" கேட்கவும் செய்வார்கள்!)

ஆகமொத்தத்தில் அது கதை அம்சங்களுக்கோ வசனங்களுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த காலகட்டமாக இருந்து வந்தது.

இறைவன் கொடுத்த வரப்ரசாதமாக இயற்கையிலேயே சங்கீத ஞானம் கைவரப் பெற்றிருந்த சிறுவன் வெங்கட்ராமனுக்கு பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் நிறைந்திருந்த நாடக மேடையில் வெற்றி கிடைக்காமல் போகுமா என்ன?

முதல் நாடகத்தில் ஏற்று நடித்த முதல் வேடத்திலேயே - சிறுவன் வெங்கட்ராமனின் துறுதுறு என்றிருந்த பால்வடியும் முகமும், அவனுடைய பாடல் திறமையும் வெளிப்பட - அனைவரையும் கவர்ந்து விட்டான். அவனுக்கு பரிசாக இருபத்தைந்து ரூபாய் கிடைத்தது.

வெற்றிப்படிகளில் அனாயாசமாக ஏறத்தொடங்கினான் வெங்கட்ராமன்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.