|
| கிரகம் |
புதன், 28-07-2010 ; 10:02 PM |
கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத்தில் 'Theatre & Short Film Festival' நடைபெற்றது. தினமும் ஒரு நாடகம் அதன் பின்னர் மூன்று Short Films திரையிட்டனர். அரங்கேறிய நாடகங்களில் அதிகப்படியானவை சிறுகதையை அடிப்படையாக கொண்டவை.
Jhumpa Lahiri யின் சிறுகதையான 'A Temporary Matter' நாடகமாக அரங்கேறியது. இச்சிறுகதையானது 2000ம் ஆண்டில் Fiction பிரிவில் Pulitzer விருது பெற்றது. நாடகத்திற்கு ஒரு நாள் முன்பு சிறுகதையை Google Books ல் படித்திருந்தேன்.
நாடகத்தில் சிறுகதையின் உணர்வுகளை அழகாக காட்டியிருந்தனர். நாடகத்திற்கும் சிறுகதைக்கும் சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நாடக குழுவினரின் பெயர் Expressions. இது இவர்களின் முதல் நாடக அரங்கேற்றம். Expressions குழுவினர் Microsoft நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். முதல் நாடகத்திலே சிறந்ததொரு சிறுகதையை தேர்ந்தெடுத்து அதனை நாடகமாக அரங்கேற்றிய Expressions குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
'A Temporary Matter' சிறுகதை அமெரிக்காவிலுள்ள போஸ்டன் மாகாணத்தில் வசித்து வரும் திருமணம் ஆகி மூன்று வருடங்களான இளம் கணவன் மனையின் கதை.
சுகுமார் - ஷோபா தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு தகவல் பலகையில் தொங்கும் செய்தியை படிக்கிறாள் ஷோபா. பனிக்காலத்தில் விழுந்த இடியில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை சரிசெய்ய தொடர்ந்து ஜந்து நாட்கள் இரவு எட்டு மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மின்சார இணைப்பு துண்டிக்கபடும் என்ற செய்தியை படிக்கிறாள்.
ஷோபா கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்திருக்கிறாள். வீட்டினுள் நுழைந்தவள் சோபாவில் சுகுமார் தூங்குவதை பார்க்கிறாள். செருப்பை உதைத்து கழட்டிவிட்டு கோட்டை கழட்டி சோபாவின் மீது வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் சுகுமாரை எழுப்புகிறாள். எழுந்தவனிடம் மின்சாரம் இன்று முதல் ஜந்து நாட்களுக்கு ஒரு மணி நேரம் தடை செய்யப்படும் விவரத்தை கூறுகிறாள். ஷோபா மாடிக்கு சென்று குளிக்கச் செல்கிறாள்.
சுகுமார் முப்பத்தைந்து வயதாகியும் படிப்பு முடியாமல் தொடர்ந்து படிக்கிறான். அவன் இலக்கியம் சம்பந்தமான பிரிவில் படிக்கிறான். ஷோபா வேலைக்கு செல்கிறாள். இருவருக்கும் பூர்வீகம் இந்தியா. அவர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவில் குடி பெயர்ந்து பல வருடங்களாகிறது. இருவருக்கும் மூன்று வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. ஆறுமாதத்திற்கு முன்பு பிறந்த குழந்தை இறந்து விடுகிறது. அதன் பின்பு இருவரிடையேயும் ஒரு வித மனகசப்பு கூடிவிடுகிறது. ஒருவர் மற்றொருவருடன் பேசுவதே அரிதாகிறது.
இரவு உணவை எட்டு மணிக்கு முடித்தாக வேண்டுமென்று ரேடியோவை ஆன் செய்து விட்டு சுகுமார் அவன் சமைத்த உணவுடன் சாப்பிட தயாராகிறான். குளித்து முடித்து வந்த ஷோபா தலையில் துண்டை முடிகளின் ஊடே சேர்த்து சுற்றிய படி சுகுமாருடன் சாப்பிட அமர்கிறாள். சரியாக எட்டு மணிக்கு ஒலித்துக்கொண்டிருந்த ரேடியோ நின்று போகிறது, மின் விளக்குகள் அணைந்து போகின்றன. சுகுமார் முன்பே எடுத்து வைத்திருந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்கிறான். மீண்டும் அவர்களின் அறையினுள் மெழுகுவர்த்தி வெளிச்சம் ஒளியை கொண்டு வருகிறது. சுகுமார் ஒயின் புட்டியை திறந்து தனக்கும், ஷோபாவுக்கும் பீங்கான் கோப்பையில் ஊற்றுகிறான். சுகுமார் சமைத்திருந்த உணவு நன்றாக இருக்கிறதென்று சொல்கிறாள் ஷோபா. ஷோபா சுகுமாரை ஜோக், படித்ததில் ரசித்தது என்று ஏதாவது சொல்ல சொல்கிறாள் ஷோபா. சுகுமார் தனக்கு ஜோக் ஒன்று கூட தெரியாது என்கிறான். இருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளாத விசயங்களை, ரகசியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறாள் ஷோபா. ஷோபாவே முதல் ஆரம்பிக்கிறாள். திருமணத்திற்கு முன்பு சுகுமார் அவன் அறையில் இல்லாத போது ஷோபா அவனின் Address Book திறந்து படித்ததாக கூறுகிறாள். திருமணம் ஆன புதிதில் ஹோட்டல் வெட்டருக்கு டிப்ஸ் தர மறந்ததாகவும் அதற்காக மீண்டும் அடுத்த நாள் அந்த ஹோட்டல் மேனேஜரிடம் டிப்ஸ் தந்துவிட்டு வந்ததாக சொல்கிறான் சுகுமார். மெழுகுவர்த்தி அணையும் வரை இவ்வாறான சின்ன சின்ன ரகசியங்களை இருவரும் பேசிக்கொள்கின்றனர்.
சுகுமார் பிறந்ததிலிருந்து ஒரே ஒரு முறை தான் இந்தியா சென்றிருக்கிறான். அதுவும் அவன் குழந்தையாக இருந்த போது. முதன் முறை அவனை இந்தியாவிற்கு அழைத்து சென்ற போது தண்ணீர் ஒத்து கொள்ளாமல் பயங்கரமான வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி இருக்கிறான். அதன் பின்னர் அவனை அவன் பெற்றோர்கள் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லவில்லை.
இரண்டாவது நாளும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வெளியில் கொஞ்சம் வெப்பமாக இருப்பதால் வீட்டு வாசலின் அருகில் அமர்ந்து பேச இருவரும் விரும்புகின்றனர். வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இருவரும் அமர்ந்து பேசுகின்றனர். முதல் நாளை போல இரண்டாவது நாளும் விளையாடுகின்றனர். சுகுமார் தன்னுடைய ஒரு பரிட்சையில் தனக்கு முன் அமர்ந்திருப்பனின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறுகிறான். ஷோபாவும் ஒரு ரகசியத்தை சொல்கிறாள். சுகுமார் தன் கையிலிருந்த கிட்டாரை மீட்டுகிறான். அதன் இசை ஷோபாவிற்கு பிடித்திருக்கிறது. ஷோபா சுகுமாரின் அருகில் நெருக்கமாக அமர்ந்து அவன் கைகளுக்குள் தன் கையை கோர்த்துக் கொண்டு அவன் மீட்டும் கிட்டாரின் இசையை ரசிக்கிறாள். நீண்ட இடைவெளிக்கு பின் இருவரும் பேசி சிரிக்கின்றனர், அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
திருமணமான புதிதில் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கின்றனர். சுகுமாரின் பிறந்த நாள் அன்று ஷோபா அவள் அலுவலக நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறாள். அந்த பிறந்த நாள் விழாவில் சுகுமாரின் கைகளை பற்றிக்கொண்டுதான் சுற்றி அலைந்திருக்கிறாள் ஷோபா.
மூன்றாவது நாளும் அவர்களின் விளையாட்டு தொடங்குகிறது. ஒரு மணி நேர இடைவேளைக்கு பின் திரும்ப மின்சாரம் வந்து மின்விளக்குகள் ஒளிர்கின்றன. ஷோபா ஸ்கின்-டைட் பேண்டும் நீல நிற டீ-சர்ட்டும் அணிந்து உற்சாகமாக நிற்கிறாள். சுகுமார் தூங்குவதற்கு எப்போதும் உபயோகிக்கும் போர்வையை தேடுகிறான். போர்வை சோபாவின் மீது இல்லை. அருகில் நின்று கொண்டிருந்த ஷோபா சுகுமாரின் போர்வை தன் படுக்கை அறையில் உள்ளதாக கூறுகிறாள். அவரவர் சாப்பாட்டை தனித்தனியே சமைத்துக் கொண்டும், முகம் பார்த்து பேசாமல் இருந்தாலும் காமம் அவர்கள் இருவரையும் இணைத்தே வைத்திருந்தது.
சுகுமாரின் அப்பா இறந்த பின் சுகுமாரின் அம்மா சில வாரங்கள் சுகுமார்-ஷோபாவுடன் தங்கியிருக்கிறாள். அந்த நாட்களில் சுகுமாரின் அம்மா அவன் அப்பாவிற்கு பிடித்த உணவை அவளே சமைத்தாள். பாவம் என்ன செய்ய அவள் சமைத்த உணவை அவளே தின்னமுடியாமல் போனது.
நான்காவது நாள் சரியாக எட்டு மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அவர்களின் விளையாட்டு ஆரம்பமாகிறது. சுகுமார் எழுதி வெளிவந்த கவிதைகளில் எதுவும் தனக்கு பிடிக்கவில்லையென்று சொல்கிறாள் ஷோபா. சுகுமார் கோபமடைகிறான். மெழுகுவர்த்தி முழுவதுமாக கரையும் வரை இருவரும் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
ஷோபா தன்னை எப்படி பார்க்கிறாள் என்பதில் சுகுமாருக்கு சந்தேகம். முப்பத்தைந்து வயதாகியும் படிப்பது அவளுக்கு பிடிக்கிறதா? என்னை அவளுக்கு உண்மையிலே பிடிக்கிறதா? போன்ற சந்தேகங்கள் சுகுமாருக்கு எழுகின்றன. ஷோபா தன் சம்பள பணத்தின் ஒரு பகுதியை தனியாக வேறொரு பேங்கில் சேமித்து வருவது தெரிந்தும் சுகுமார் இது பற்றி அவளிடம் ஏன் ஏதற்கென்று கேட்டதில்லை.
மின்சார இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறியிருந்த ஜந்து நாட்களில் ஒரு நாள் முன்னதாகவே மின்சார பாதிப்பு சரி செய்யப்பட்டு விடுகிறது. ஷோபா அன்றைய தினம் சற்று பதற்றத்துடன் இருக்கிறாள். சுகுமார் ஷோபாவின் மூலமாக மின்சார பாதிப்பு சரி செய்யப்பட்ட செய்தியை அறிகிறான். ஷோபா பதற்றத்துடன் தான் சில காலம் தனியாக இருக்க விரும்புவதாகவும், அதற்காக வேறொரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு பார்த்துவிட்டதாகவும், வீட்டிற்கு முன் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுகிறாள். சுகுமார் ஷோபா கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். தனக்கு இதில் உடன்பாடில்லை என்கிறான். ஷோபாவிடம் குழந்தை இறந்த சமயம் மருத்துவமனைக்கு வந்ததையும் அப்போது அவன் அடைந்த மனவேதனையும் கூறுகிறான். தனக்கும் அந்த குழந்தையின் இறப்பில் வேதனை இருந்ததாகவும் கூறுகிறான். விளக்கு அணைகிறது. இருவரும் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழுகின்றனர்.
|
நண்பரே கடைசியில் என்ன ஆனது.. இது நாடகமாக அரங்கேற்றப்பட்டதா?
அனுப்பியவர் சகா on Wednesday, 28.07.10 @ 09:00am
நல்ல கட்டுரை.. its really very interesting.
அனுப்பியவர் Gnanavel on Wednesday, 28.07.10 @ 09:43am
இந்த ஐந்து நாட்களில் அவர்கள் ஒன்று கூடி விடுவார்கள் என்று நினைத்தேன். நல்ல சுவாரசியமான பதிவு.
அனுப்பியவர் ரமேஷ் on Wednesday, 28.07.10 @ 21:07pm
idhu yaarudaiya kadhai? iruvarukkumidaiye nadakum uraiydaal arumai. i like very much.
அனுப்பியவர் Sudhakar on Wednesday, 28.07.10 @ 21:54pm
idhu naadagamaa kurumbadamaa? miga arumaiyana kadhai.
அனுப்பியவர் Senthil on Thursday, 29.07.10 @ 00:26am
nice to read...good.
அனுப்பியவர் Deva on Thursday, 29.07.10 @ 02:46am