வாயில் தொடர்புக்கு  
அறிவிப்பு
கூடு மூன்றாம் இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. அடுத்த இதழ் 11-01-10 அன்று பதிவேற்றப்படும்
 
     
  தலையங்கம்  
  கட்டுரைகள்  
  ஊஞ்சல்
- கலாப்ரியா
  'தமிலி'ல் பேசினால் தப்பா?
- தமிழ்மகன்
  கறுப்புப் பாலைவனம்
- சமயவேல்
  என் பேனாவின் கால் தடங்கள்
- பூபதி
  பொது  
  பா - ஒரு பார்வை
- அபிலாஷ் சந்திரன்
  திரைக்கதை  
  கடந்து வந்த பாதை  
  கழுகுப்பார்வை  
  ஒரே ஒரு நாள்  
  ஒளிப்படங்கள்  
  ஓவியக் குறும்பு  
     
     
     
   
 
1
சீனிவாசன் சிறப்பிதழ்
  சிறப்புக் கட்டுரை - 1  
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள
  வகைகள்
  கூடு சிறப்பு இணைப்புகள்
  கடந்த இதழ்கள்
   
 

     
     
     
     
     

கழுகுப் பார்வை

தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை -
அஜயன் பாலா

அஜயன் பாலா... எழுத்தாளன், நடிகன், இயக்குனன் என மூன்று முகம் கொண்ட ஒரு பகல் வேடதாரி. தொடர்ந்து பலத் திரைப்படங்களின் விவாதங்களில் தன் இருத்தலை உறுதி செய்பவர். எழுத்தின் மூலம் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் மாயாவி.

இதுவரை வெளியான நூல்கள்: மயில்வாகனன் மற்றும் சிறுகதைகள், பைசைக்கிள்தீவ்ஸ் திரைக்கதை, மார்லன்பிராண்டோ, உலகசினிமா வரலாறு, மவுனயுகம்.

விகடன் பிரசுரம் நாயகன் வரிசை நூல்கள் 1.பெரியார் 2.அம்பேத்கர் 3.சார்லி சாப்ளின் 4.கார்ல்மார்க்ஸ் 5.நெல்சன் மண்டேலா 6.அன்னைதெரசா விரைவில் வெளியாக உள்ளவை.... ஆழி பதிப்பக வெளீடாக, பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைக்கதை, தமிழ் வடிவம் மற்றும் ஓவியர் வான்கா எழுதிக்கொண்டிருக்கும் தொடர்கள் 1.நாயகன், விகடன் 2.பகல்மீன்கள் ..தொடர்கதை...கல்கி வார இதழ் 3. உலகசினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் ...புத்தகம் பேசுது.. 4.நீரூற்று இயந்திர பொறியாளன் ....நாவல் தொடர் www.thadagam.com

அஜயன் பாலா தான் ரசித்த, நேசித்த திரைப்படங்கள் பற்றியும், திரைப்படங்களில் வில்லன்கள் வருகை, இன வரைவு வில்லன்களின் வருகை என தமிழ் திரைப்படத்தின் மாற்று பற்றியும் தனது கருத்தை பதிவு செய்கிறார்.

70 களில்தான் முதன்முறையாக வில்லன்களுக்கு கோட்டு போடும் உரிமையே வந்தது. அதுவரை பெரும்பாலும் கட்டம் போட்ட லுங்கி, கர்ச்சீப், கன்னத்தில் பெருமாள் கோயில் உருண்டை சைசில் மச்சம் என வில்லத்தனத்தோடு உப காரியமாய் பூச்சாண்டி காட்டுவதையும் செய்துவந்தனர். அதிலும் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் சொல்லவேண்டாம். அவர்கள் திரையில் தோன்றினாலே கரிச்சு கொட்ட ஆரம்பித்தனர். பாவம் நம்பியார் தான் அதிகமான திட்டு வாங்கியிருப்பார். ராமதாஸ் பி.எஸ் வீரப்பாவுக்கு கூட அப்படி கிடைத்திருக்காது. ஒரு பக்கம் எம்.ஜி ஆரிடம் அடி இன்னொருபக்கம் பார்வையாகளின் வசவு என இரண்டுபக்கமும் கும்மாங்குத்து வாங்கி அவதிப்பட்டனர். இந்த சூழலில்தான் அசோகன் வந்தார். கொஞ்ச நாள் அவரும் எம். ஜி. ஆரிடம் அடிவாங்கி களைத்து போய் கடைசியாக ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் காலம் வந்ததும் அப்படியே ஷிப்ட் ஆகினார். வாங்கோ.. உக்காருங்கோ என குரலை நீட்டி மக்கள் கைதட்டி ரசிக்கத்தக்க வில்லனாக மாறினார். இக்காலத்தில்தான் வில்லன்களின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்துவங்கியது. அதுவரை நேரடியாக அடிதடியில் இறங்கிய வில்லன்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பிதத்து. உடன் அவர்களும் ஒதுங்கி போய் ஒரு மேசை மேல் இருட்டில் உட்கார்ந்து கொண்டு பல கலர்பல்புகளுடன் மிஷின் ஆபரேட்டர் போல் தோற்றம் தர ஆரம்பித்த்னர்.

70துகளில் சினிமாவுக்கு யாராது சென்றுவந்தால் சிறுவர்கள் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி இந்த படத்தில் பாஸ் யாரு?

பாஸ் என்றால் ஏதோ பெரிய மல்டி நேஷ்னல் கம்பெனியின் ஓனர் என நினைக்கவேண்டாம் . இவர்கள் கேட்பது கொள்ளை கூட்ட பாஸ்.

அதுவும் புரியாதவர்களுக்கு இன்றைய பாஷையில் சொல்வதானால் வில்லன்.

இன்று இருப்பது போல அன்றைய வில்லன்களுக்கு அரிவாளை துக்கிக்கொண்டு அங்குமிங்குமாக ஓடவேண்டியதோ, சரியாக மீசைகூட முளைக்காத கதாநாயக பயல்களின் அடிக்கு பயந்து கடைசியில் மானம்கெட்டு கைகூப்ப வேண்டியதோ ,நாயகிகளின் அப்பாவாக அண்னனாக மாமனாக டாடா சுமோவில் வெள்ளைசட்டை மீசை சகிதம் ஆயுதங்களுடன் திரிய வேண்டிய அவசியமோ,அல்லது முகத்தை அஷ்ட கோணலாக்கி பக்கம் பக்கமாக வசனம் பேசவேண்டிய அவசியமோ இல்லை. சிம்பிள் ஒரே ஒரு மொட்டை மட்டும் போட்டுகொண்டிருந்தால் போதும் கூடுதலாக வித்தியாசமாக சிரிக்க தெரிந்துகொண்டால் போனஸ் பாயிண்ட்..பெரிதாக அடிதடி எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எல்லாம் மிலிட்டிரி டிரஸ் போட்டு துப்பாக்கி சகிதம் நடமாடும் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள்.

எப்போதாவது கற்பழிக்க வேண்டிய தேவை மட்டும் ஏற்படும் அதிலும் பெரும்பாலும் நாயகியாகத்தான் இருக்கும் இல்லாவிட்டால் கிளப்பில் இரண்டு அரைகுறை ஆடையுடன்கூடிய நங்கைகளின் தோளில் சரிந்து கொண்டு மது அருந்துவது அல்லது மது அருந்திக்கொண்டே போன் பேசுவது இதுதான் அவரது முக்கியபணி. (வெல்லம்......பேசாமல் அந்த காலத்து வில்லனாக பிறந்திருந்தால் செம வாழ்க்கை)

அதே போல பாஸ் அவ்வளவு சீக்கிரம், சுலபமாக காட்சியளிக்கமாட்டார். மேடைமேல் சில் ஹவுட்டில் அதாவது நிழல் உருவமாகத்தான் காட்சி கொடுப்பார். அவரை எல்லோரும் பாஸ்.. பாஸ்.. என்றுதான் அழைக்கவேண்டும்.. ஒரு கட்டத்தில் சுட்றாதீங்க பாஸ்.. பாஸ்.. என ஒருவர் அலற அவரை பாஸ் துப்பாக்கியால் சுட்டு புகையை வாயால் ஊதுவார்.

க்ளைமாக்சில் காலி கள்ளி பெட்டிகள் அல்லது அட்டைபெட்டிகள் அடுக்கப்பட்ட குடோவுனில் கதாநாயகனின் அண்ணி, அம்மா, காதலி, தங்கை அல்லது தங்கச்சி புருஷன் இவர்களில் யாராவது மூன்றுபேரை கயிற்றில் கட்டிபோடவேண்டும். வில்லன்களுக்கும் இந்த கள்ளிப்பெட்டிகளுக்கும் அப்படி என்ன தொடர்போ தெரியவில்லை. இதுகுறித்து கூட யாராவது ஆய்வு செய்யலாம். சினிமா ஷூட்டிங்குகளுக்கு கள்ளிப்பெட்டி சப்ளை செய்தே கோடீஸ்வரர் ஆன ஏஜெண்ட் கதைகளும் உண்டு. மற்றபடி க்ளைமாக்சில் மட்டும் நேரடியாக கதாநாயகனுடன் சண்டை போடவேண்டிவரும். அப்போதுமட்டும் நான்கைந்து குத்துக்களை வாங்க உடம்பை தேத்தி வைத்துக்கொண்டால் போதும். மற்றபடி பாஸ்களின் வாழ்க்கை ஜாலிவாழ்க்கை.

77க்கு முன் தமிழ்சினிமா எப்படி இருந்தது என்பதற்கு இந்த 'பாஸ்' களின் அட்டூழியம் ஒன்றே போதும் அதன்பிறகு 'பாஸ்'கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதி, கதாநாயகியின் அப்பா அல்லது அண்ணன் என யதார்த்த முகங்களுக்கு மாறினர். ஹெலன், சி.ஐ.டி சகுந்தலாவுக்கு பதில் சில்க் அனுராதா கச்சைகட்டினர். எம்.ஜி.ஆரிடம் வாங்கிய அடிகளை தொடர்ந்து நம்பியார் பாவம் ரஜினி கமல்களிடமும் கொஞ்சநாள் அடிவாங்கினார். பிறகு அந்த பொறுப்பை ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு வயதுக்கு தகுந்த கேரக்டர் பக்கம் ஒதுங்கிக்கொண்டார். இவர்களை தொடர்ந்து கொஞ்சநாள் தியாகராஜனும் பிறகு ராதாரவியும் நாயகிகளுக்கு அண்ணன்னாக அல்லது அப்பாவாக அல்லது கிராமத்துபண்ணையாராக வலம் வந்து வில்லத்தனங்கள் செய்தனர். மம்பட்டியானுக்கு பிறகு தியாகராஜன் கொஞ்சம் ஹீரோபக்கமாக ஓரம் கட்டப்போக ராதாரவிமட்டுமே ரொம்ப நாளைக்கு வேட்டிகட்டியவில்லனாக வெற்றிவலம் வந்தார். அப்படியே அவர் பேண்ட் போட்டாலும் கோட்டு சூட்டுடன் தொழிலதிபர் வில்லனாக வந்தாரே ஒழிய நகரத்துவில்லன் வேஷத்துகு அவரை யாரும் கூப்பிடவில்லை என்றே தெரிகிறது. இக்காலத்தில் தமிழ் ரசிகர்களுக்கு உயரமான வில்லன்களை பார்க்கும் ஆசைவந்தது. மேலும் அவர்கள் ஒரே மாதிரி சுயமற்றவர்களாக க்ளைமாக்சில் கோழைகளைப்போல கதாநாயகனுக்கு பயந்து ஓடுபவர்களாக இல்லாமல் கொஞ்சம் விவரமானவர்களாகவும் சுயமரியாதை மிகுந்தவர்களாகவும் இருக்கவேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சத்யராஜும் ரகுவரனும் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பிற்பாடு இதே பாணியில் பிரகாஷ்ராஜும் அதே உடல்தகுதியுடன் வில்லனாக நெடுங்காலத்துக்கு வலம் வந்தார். இப்படி உயரமானவர்களை வில்லனாக்கி பார்க்கும் மனோபாவம் தமிழனுக்கு வர காரணம் என்ன என ஒரு கலாச்சார ஆராய்ச்சியே கூட செய்யலாம். இப்படியான வில்லன்கள் வில்லர் எனும் மரியாதையான இடத்துக்கு வந்தாலும் கிளைமாக்சில் அவர்கள் தர்ம அடிவாங்குவது மட்டும் குறையவில்லை. என்ன சாகும் போது மட்டும் கொஞ்சம் விறைத்துக்கொண்டு அப்போதும் அதே திமிருடன் இறந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சிலபடங்களில் எதிலுமே சேத்தி இல்லாமல் மன்சூர் அலிகான் வில்லனாக வலம் வந்தார். ஆனால் அவர் நிஜவாழ்க்கையிலும் சில வில்லத்தனம் செய்துவிட்டதாக ஒரு பெண் புகார் கொடுத்ததன் பேரில் தன் கேரியரை இழந்தார். இப்படியாக பல வில்லர்கள் வலம் வந்தாலும் தனது எதார்த்தமான் நடிப்பால் வில்லத்தனத்திற்கும் மரியாதை கொடுத்தவர் நாசர். கமல்ஹாசனுடன் அவர் வில்லனாக நடித்த பல படங்களில் குணச்சித்திரமும், ஹாச்யமும் களைக்கட்டின. இன்னும் சொல்லப்போனால் தேவர் மகன் படத்தில் அவரது நடிப்பு கமல் மற்றும் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக இருந்தது, என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவரயிலான வில்லன் நடிப்பில் சிறந்த நடிப்பு எதுவென்று கேட்டால் தேவர் மகன் தான் என கண்னை மூடி கூறிவிடலாம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இன்னமும் நம் கண்முன்னால் நிற்கிறது. ஒருபக்கம் கமலுக்கு வில்லனாக நாசர் என்பதும் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் என்பதும் எழுதப்படாத விதியாகவே இருந்தது. கமல் நாசர் இருவரும் மெதட் ஆக்டிங் எனப்படும் திட்டநடிப்பில் ஒத்துப்போவதாலும் ரஜினி ரகுவரன் இருவரும் ஹைப்பர் ஆக்டிங் எனப்படும் ஆற்றல் நடிப்பு வைகையை சேர்ந்ததாலோ என்னவோ இந்த காம்பினேஷன் இயல்பாகவே ஒத்துப் போனது.

இதன்பிறகு அஜீத், விஜய் ஆகியோர் காதல்கதைகளுடன் வந்த போது வில்லனின் ரோல் கொஞ்சம் மாறத்துவங்கியது. அதுவரை உயரமாக இருந்த வில்லனுக்கு இப்போது மீசை காணமால் போனது. கொஞ்சம் பணக்காரத்தன்மை அல்லது அமெரிக்க ரிட்டர்ன் ஆகியோர் வில்லன்களாக வந்தனர். இக்காலங்களில் கதாநாயகன் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனாகவே இருந்துவந்ததால் அவர்களது வில்லன்கள் தவிர்க்கமுடியாத பணக்கார இளைஞனாகவும் அமெரிக்க ரிட்டர்னாகவும் இருந்தார்கள். இக்காலத்தில் கரண் தான் பிசியாக இருந்தார். அஜீத்துடன் நண்பனாக விஜய்யிடம் வில்லனாக அல்லது அஜித்திடம் வில்லனாக விஜய்யிடம் நண்பனாக என மாறிமாறி பிஸி கால்ஷீட்டில் பறந்தார்.

இக்காலத்தில் க்ளைமாக்சில் வில்லன்கள் அடிவாங்குவது குறைந்து மிக நல்லவர்களாக மாறி நாயகியையும் நாயகனையும் சேர்த்துவைப்பது ஒன்றைமட்டுமே செய்துவந்தனர். க்ளைமாக்சில் நாயகன் கருத்து சொல்வது அல்லது அதிர்ச்சி அடையவைப்பது போன்றவை இக்காலத்தில் துவங்கியது..

வில்லன்கள் என்பது ஆட்கள் என்பதிலிருந்து விலகி சமய சந்தர்ப்பங்கள் வில்லன் ரோலில் முக்கிய பங்கு வகித்தன. வில்லன்கள் இல்லாத அல்லது அவர்களது ஆதிக்கம் குறையகுறைய தமிழில் மெல்ல நல்ல சினிமாக்கள் உதயமாக துவங்கின. அதன் முதல் துவக்க புள்ளியாக வந்த திரைப்படம் சேது.

2000க்கு பிறகு வந்த இந்தி வில்லன்கள்

1999ன் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியானது சேது திரைப்படம். இம்முறை மக்கள் மாறினார்கள் ஆனால் கோடம்பாக்கம் மாறவில்லை. அதன்பிறகும் வில்லன்கள் வந்தனர். ஆனந்த்ராஜ், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் அதீத பணக்கார பின்புலத்துடன் வில்லனாக வலம் வந்தனர்.. சேதுவுக்குபிறகு தொடர்ந்து பல திரைப்படங்கள் தோல்வியுற்ற போதும் மக்களின் ரசனை மாற்றத்தை கோடம்பாக்கம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.

தயாரிப்பாளர்கள் மீண்டும் க்ளைமாக்ஸ் கருத்து சொல்லும் படங்களையும் பணக்கார வில்லன்களையும் எதிர்பார்த்தனர். இக்காலகட்டத்தில்தான் பல இந்திக்கார வில்லன்கள் கஷ்டப்பட்டு தமிழ்பேசி விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் விஜய் அஜீத், சூர்யா, விக்ரமோடு சண்டை போட்டனர். பிரகாஷ்ராஜ் அவர்களை எல்லாம் தன் அனாயசமான வசன உச்சரிப்பால் ஓரம்கட்டி ஆதிக்கம் செலுத்தினார். இக்காலத்தில்தான் வந்தார் தங்கர்பச்சான். இவர் அழகி எனும் புதிய திரைப்படத்தை மக்கள் முன் வைத்தார். பச்சையான மரம் செடிகொடிகளைபோல தங்கர்பச்சானின் செம்பட்டை முடி மனிதர்களும் பச்சையான வாசத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார்கள். இவர் படத்தில் வில்லன் வாழ்க்கையின் விதியும் காலமுமாக இருந்தது..

சேதுவில் மன நலம் குன்றியவர்களை காண்பிக்கும் காட்சியும், அழகியில் சிறுவயது பருவ காட்சிகளிலும் இயக்குனர்கள் தங்களது தனித்தன்மையை நிரூபித்திருந்தனர்.

இக்காலத்தில் தமிழில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடும் அதன்காரணமாக இயக்குனர்களின் கதை சொல்லல் போக்கும் நிறையவே மாறத் துவங்கியிருந்தது. கவுதம் மேனன், செல்வராகவன் போன்ற தொழில்நுட்ப தேர்ச்சிகொண்ட அதேசம்யம் புதிய தலைமுறைக்கான ரசனைகளை அறிந்த இயக்குனர்கள், இளைஞர்களை கவர்ந்தனர். செல்வராகாவனின் துள்ளுவதோ இளமை இக்கால இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் உளவியலை அப்பட்டமாக சிததரித்திருந்தது..அதன்பிறகு வெளியான இவரது படங்களில் செக்ஸும், வன்முறையும் இடம் பிடித்ததே தவிர அந்த யதார்த்தம் காணாமலே போனது ஒரு இழப்பு.

இவர்களின் வரவுக்குபிறகு தமிழின் மிகச்சிறந்த மாறுதல் 2004ல் தான். இதற்குமுன் பாலா, தங்கர்பச்சான் ஆகியோர் துவக்கியிருந்த பாதையில் சேரன் மற்றும் பாலாஜிசக்திவேல் பயணத்தை துவங்கினார்கள். ஆட்டோகிராப், காதல் இந்த இரண்டு படங்கள்தான் முதன்முதலாக திரைக்கதை, வசனத்தை சினிமாவாக பிரதிஎடுக்கும் வழமையான போக்கை மாற்றின. அதுவரை காட்சி ரீதியாக கதை நகர்த்தும் தன்மை விலகி, ஷாட் பை ஷாட்டாக கதை நகர்த்தும் உலகசினிமாவின் அடிப்படை தகுதியை தமிழ்சினிமா இப்படங்களின் மூலமாகத்தான் எட்டத்துவங்கியது. இதில் காதல் படத்தில் வில்லன் இருந்தாலும் அக்காலகட்டத்தில் மண்சார்ந்த அல்லது இனவரவியல்கூறுகளுடன் கூடிய பாத்திரப்படைப்புகளின் துவக்கமாக இந்தபடத்தின் வில்லர்களின் தன்மை மாறியிருந்தது. இந்த இருபடங்களும் தமிழில் தர அடிப்படையில் முதன் முதலாக வெளிநாடுகளில் நடக்கும் உலகபடவிழாக்களில் பங்கேற்கும் தகுதியை பெற்றிருந்தன.

காதல், லண்டன் திரைப்படவிழாவிலும், ஆட்டோகிராப், டொராண்டோ திரைப்படவிழாவிலும் பங்கேற்கும் தகுதியை அடைந்து தமிழர்களின் நீண்டநாள் கனவை பூர்த்திசெய்தன. அதிலும் ஆட்டோகிராப் முதல் காட்சியில் நாயகன் ஊரில் கால் அடிவைக்கும் போது ஞாபக அடுக்குகளிலிருந்து சரிந்துவிழுவதாக காட்டப்படும் நூற்றுக்கண்க்கான வாழ்க்கை துணுக்குகள் தமிழ்சினிமா அதுவரை காணாதது. மேலும் படத்தின் துவக்கத்தில் வரும் பள்ளி பருவ காதல்காட்சி உலகசினிமாவின் தரத்திற்கு மிகச்சரியான உதாரணம். இதனை தொடர்ந்துவந்த அடுத்தடுத்த பருவங்கள் அந்த தரத்திலிருந்து தன்னை குறைத்துக்கொண்டே வந்தன. என்றாலும் தமிழில் கடந்த பத்தாண்டுகளில் உலகதரமதிப்பீட்டில் முன்னணியில் இருக்கும் படமாக ஆட்டோகிராப் படத்தைத்தான் சொல்ல முடியும்.

அதே போல காதல் படத்தில் கையாளப்பட்ட சில அரிதான நுட்பங்கள் அதன் நம்பகத்தன்மையையும் கலைத்தரத்தையும் கூட்டித்தந்திருந்தன. இறுதிக்காட்சியின் மிகைத்தன்மை மற்றும் செயற்கையான முடிவு ஆகியவை மட்டும் சரிசெய்யப்படிருந்தால் இதுவும் தமிழின் உன்னதத்தை உலக சினிமாவின் பட்டியலில் இடம் பெற வைத்திருக்கும். சேரனின் தவமாய் தவமிருந்து இதேவரிசையில் வந்திருந்த தரமான திரைப்படம்.. கடின உழைப்பும், கலைநயமும் சிறப்பாக வடிவம் கொண்டிருந்த இப்படம் பொது அனுபவமாக மாறாமல் தனிமனித அனுபவமாக அதாவது நாவல் வாசிப்பதுபோன்ற அனுபவத்தோடு தங்கிப்போனதால் ஆட்டோகிராப் அடைந்த உயரத்தை இப்படம் அடைய முடியாமல் போனது.

இனவரைவு படங்களின் வருகை..

இப்போது காதல் உருவாக்கிய இனவரைவு வில்லன்கள் மெல்ல தமிழில் பலத்திரைப்படங்களில் பிரவேசிக்க துவங்கினர். இச்சமயத்தில் வெளியான பல சென்னை நகர் சார்ந்த குறிப்பாக வடசென்னையை பின்புலனாக கொண்ட பலபடங்களில் இத்தகைய இனவரைவு வில்லன்கள் அதிகமாக தோற்றமளித்த்னர். பலர் கழுத்துவரை நீளமாக முடியை வளர்த்துக்கொண்டு பயமுறுத்தினர். காக்க காக்க படத்தில் வில்லனாக தோன்றிய ஜீவன் இந்த பேஷனை துவக்கினர். இப்படியாக முடியை இரண்டுபக்கமும் பரப்பிக்கொண்டு தோற்றமளிக்கும் வில்லன்களின் ஆதிக்கம் இன்றுவரை குறையவில்லை

ஒரு கட்டத்தில் இனவரைவை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்கள் அதிகமாக வரத்துவங்கின. இதற்கு அப்போது சக்கை போடுபோட்ட உலகசினிமாவான 'சிட்டி ஆப் காட்' மூலகாரணமாக இருந்து நம் இயக்குனர்களை அதன் கவர்ச்சியில் விழ வைத்தது. இது போன்ற படங்களில் குறிப்பிடத்தகுந்த படமாகவும் வடசென்னை வாழ்வின் ஒருபகுதியாக கானா வைசரியான முறையில் பயன்படுத்தி வெற்றிபெற்ற படம் சித்திரம் பேசுதடி. இதில் நானே ஒரு அங்கமாக இனவரைவு பாத்திரமாக நடிக்க நேர்ந்தது.

இப்படத்தில் வில்லன் ஒரு மண்டி வியாபாரியாக பேரம் பேசிக்கொண்டே தன் அடியாட்களுக்கு கட்டளையிடுவது வேடிக்கையாகவும் புதுமையாகவும் இருந்தது. இப்படியாக பலபடங்கள் இக்காலத்தில் வந்தாலும் பிற்பாடு வந்த பொல்லாதவன், சென்னை இனவரைவியலை துல்லியமாக சித்தரித்தபடமாக வெளியானது. ஆனால் இதில் வில்லன் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அக்காலகட்டத்துக்கான புதியமசாலாபடமாக மாறிப்போனது விபத்து.

தொடர்ந்து வெளியான படங்களில் பருத்திவீரன், வெயில் போன்றபடங்கள் மட்டுமே மேற்சொன்ன ஆட்டோகிராப் மற்றும் காதல் திரைப்படத்திற்கு இணையான தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் உண்டாக்கின.

பருத்திவீரன் திரைப்படம் கிட்டத்தட்ட தமிழ்சினிமாவின் கத்ரினா புயல் என்றுதான் சொல்லவேண்டும். தொழில் நுட்ப ரீதியாக தன் அசாத்திய புலமையை இயக்குனர் இத்திரைப்படத்தில் அழுத்தபதித்திருந்தார்.. இரண்டும் இனவரைவு படங்களாகவும் காதல் படத்தை தொடர்ந்த மதுரை சார்ந்த இனவரைவு படங்களின் நீட்சியாகவும் இருந்தன. இரண்டு படங்களிலும் தென்பகுதி மக்களின் வாழ்வு உள்ளும் புறமுமாக தோலுரிக்கப்பட்டது. வெய்யிலில் மனிதவாழ்வின் அவலம் ஆன்மவிசாரமாக ஒரு இலக்கியத்தகுதியுடன் படைப்பாக்கம் பெற்றிருந்தது. ஒழுங்கிற்குள் கட்டமைக்கபடாத திரைக்கதை அதன் குறையாகிபோனது. அதே போல பருத்திவீரன் தமிழின் மிகச்சிறந்த காட்சிபடுத்துதலை தக்கவைத்துக்கொண்டிருப்பினும் அதன் உள்ளடக்கம் வணிக ரசனையை சார்ந்தே இயக்கம் கொண்டிருந்த காரணத்தாலும் பிற்போக்கு தனத்தை ஆதரிக்கும் இறுதிக்காட்சியின் வன்முறை காரணமாகவும் உலகதர மதிப்பீட்டை இதனால் எட்ட முடியாமல் போனது. ஆனாலும் வெயில் கேன்ஸ் திரைப்படவிழாவிலும், பருத்திவீரன் ஜெர்மனி திரைப்படவிழாவிலும் கலந்து தமிழர்களுக்கு பெருமையை ஈட்டிதந்தன.

இந்த நான்கு படங்களுடன் இக்காலகட்டத்தில், சென்னை 28, மொழி, சுப்ரமண்யபுரம், பூ, வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, நாடோடிகள் போன்ற படங்கள் இதேவரிசையில் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று வருவதும் வணிக திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதும் குறிப்பிடத்தகுந்தது. மேற்சொன்ன படங்களில் சுப்ரமணியபுரம் படம் மட்டுமே வில்லனை தக்கவைத்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த சென்னை இன வரைவு, மதுரை இனவரைவு ஆகிய இருகூறுகளுடன் வெண்ணிலா கபடிக்குழு, பசங்க போன்ற்வை தமிழகத்தின் வன்முறை இல்லாத இதரசிறு நிலப்பரப்புகளை பின்புலனாக கொண்டு வெளியாகி இருந்தன.

என்னதான் நல்லபடமாக இருந்தாலும் வில்லனை தக்கவைக்கும் போது அந்தபடம் தவிர்க்க முடியாமல் வன்முறைசார்ந்து இயங்க நேரிடுவதையும் எதார்த்தம் இழப்பதையும் நம்மால் உணரமுடிகிறது.

இனவரைவு படங்களின் காரணமாக குறிப்பிட்ட பகுதிமக்களின் கலாச்சராம் பொதுத்தனமைக்குள் ஊடுருவது வரவேற்கத் தகுந்ததாகவும் பன்னாட்டு தொழில் முதலீடுகளின் காரணமாக மாறிவரும் கலாச்சார மாண்புகளுக்கு தக்க பதிலடியாகவும் இயங்கி வருவது வரவேற்கதக்க விஷயமே ஆனாலும் இது போன்ற படங்களில் கதாநாயகர்களாக சித்தரிக்கபடும் லும்பர்கள் பராகிரமசாலிகளாகவும் பெண்களை தங்களது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இளைஞர்களின் கைத்தட்டலையும் அதன் மூலம் கல்லா கட்டலையும் குறிவைத்து தரமான பின்புலத்துடன் உண்டாக்கபடும் இது போன்ற திரைப்படங்களால் சமூகம் பெருத்த சீரழிவுக்கே அழைத்து செல்லப்படுகின்றன. பெண்களை கொச்சைப்படுத்தும் ஒரு படம் அது எத்தனை தரமாக எடுக்கப்பட்டிருந்தாலும் மோசமான படமே. மதுரை இனவரைவு சார்ந்து எடுக்கப்பட்ட பல படங்கள் தொழில் நுட்பத்தில் என்னதான் சிறந்து விளங்கினாலும் வன்முறை, மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் அதிகமாக ஈடுபடுவதும் பிற்போக்கான கருத்துகளை ஆதரித்து வருவதும் வருந்தத் தக்கதாகவே இருக்கிறது.

பொதுவாக இக்கட்டுரையை காலம் தோறும் நிகழ்ந்துவரும் வில்லன்களின் மாறுபாடை சொல்லவே எழுத நினைத்தேன். ஆனால் தவிர்க்கவே முடியாமல் 2000க்கு பிற்கான சினிமக்களை அலசும் விதமாக மாறிபோய்விட்டது.

இப்படியெல்லம் எழுதுவதால் இது ஏதோ வில்லன்களை ஒழித்துக்கட்ட நடக்கும் சதியாக யாரும் கருதவேண்டாம். இது ஒருபார்வை அவ்வளவே.

அதற்காக நான் சொல்வது மட்டுமே வேதவாக்கும் அல்ல.

 

------------------------------------------------------------------------------------------------------
 

தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. அப்படியான படைப்புகள் மட்டுமே கூடு இணைய இதழில் வெளியிடப்படும். படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும்.

9 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

ரொம்ப சிறப்பான கட்டுரை பாலா. சுவாரஸ்யமாகவும், கருத்தாய்வாகவும் இருந்தது.

அனுப்பியவர் பொன்.சுதா on Tuesday, 29.12.09 @ 10:23am

boss excellent. villangal patri ippadi oru padhivaa? superb..

அனுப்பியவர் Sundhar on Wednesday, 30.12.09 @ 03:34am

appadiye ajayan bala punch.. boss varthai pirayogame arumai. kalakkal bala.

அனுப்பியவர் கனி on Monday, 4.01.10 @ 08:11am

abaram ajayan bala sir. ungal eluthugal ottam pidikiradhu. enna eluthinaalum. vilanga patriya nerthiyana padhivu.

அனுப்பியவர் Paari on Monday, 4.01.10 @ 10:57am

niyayamana katturai. boss kalin aadhikkam kuraiya vendum. indhap paguthiyil eluthum anaitthu eluthaalargalum arumaiyaaga eluthugiraargal.

அனுப்பியவர் Durai on Monday, 4.01.10 @ 11:11am

neengal eluthiya indha katturai miga nalla padhivu.. villangal patriy yaaravadhu aaivu seidhaal idhu thavirkka mudiyaadha paguthi. valthugal ajayan bala.

அனுப்பியவர் Bala Manikam on Tuesday, 5.01.10 @ 21:22pm

நண்பர் அஜயன்பாலா ஒரு விரிவான பார்வையை மிகச் சரியான ஆழங்களுக்கு இட்டுச் செல்கிறார். இந்த இடத்தில் இதுவரை வெளியாடாத ஒரு ரகஸ்யத்தை சொல்ல வேண்டி ஆக்விட்டது. ஆட்டோகிராப் படத்தின் முதல் பகுதி உலக சினிமாத்
தரத்திற்கு இருப்பது குறித்து எனக்கு ஆனந்தமாக இருக்கிற்து. ஏனெனில் அது மறைந்த வலம்புரிஜான்
நடத்திய தாய் இதழில் நான் எழுதிய சந்திப்பு என்னும் சிறுகதை.வரிக்கு வரி அப்படியே அவர்கள் படமாக்கி விட்டார்கள். தாய் இதழ் நண்பர்கள் அனைவரும் என்னை கை கொடுத்து பாராட்டியதும் திரு வலம்புரிஜான் ரூ.100/ அளித்து பாராட்டியதும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அனுப்பியவர் க‌பிலா on Wednesday, 6.01.10 @ 05:10am

villangal muga kizhikkum katturai.. :) supeb ajayan bala.

அனுப்பியவர் Ganesh on Thursday, 7.01.10 @ 21:20pm

வில்லன்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து விட்டீர்கள், படங்களும் வெகு விமரிசையாக அலசப் பட்டுள்ளன. கருத்தாய்வும் சிறப்பாகவும் அதே சமயம் சுவாரசியம் குன்றாமலும் இருந்தது பாலா.

அனுப்பியவர் ரம்யா தேவி on Saturday, 16.01.10 @ 00:36am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.