குறுந்திரை
குறும்பட ஆவணப் படத் தொடர் - யாழினி முனுசாமி
நடந்தகதை
குறும்பட ஆவணப்பட இயக்கம் (Direction) இன்று கதையிலும் தொழில்நுட்பத்திலும் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. பல குறும்படம் மற்றும் ஆவணப் படமும் தொழில்நுட்ப ரீதியாக சமுக அக்கறை உடனும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு சிறந்த இயக்குனர் பொன் சுதா இயக்கிய ‘நடந்த கதை.
 |
ஓசை எழுப்பும் செருப்பணிந்த பேரன் தன் தாத்தாவை மகிழ்ச்சியுடன் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருக்கிறான். தாத்தாவுக்குப் பழைய நினைவுகள் வருகின்றன. செருப்பில்லாமல் நடந்து அவர் மனதில் ஏற்பட்ட வழிகள் காட்சிகளாக விரிகின்றன. |
வீரையாம்பட்டி கிராமம் அதிகாரமும் அகங்காரமும் கொண்ட மேல்சாதியினர் வசிக்கும் மேலத்தெரு, சமுக சதியால பிறக்கும் போதே அடிமையா பிறக்கும் மக்கள் வாழும் பகுதியான கீழத்தெரு என கிராமமே இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.
வீரபத்திரன்தான் இக்கதையில் நாயகன். அவன் சிறுவனாக இருக்கும்போது அவனுடைய அம்மா, அப்பா சுற்றத்தார் மட்டுமின்றி கீழத்தெரு மக்கள் அனைவருமே செருப்பில்லாமல்தான் நடக்கிறார்கள். இது மேல்சாதியினரின் கட்டளை. ஆனால் மேலத்தெரு மக்கள் செருப்போடு நடக்கிறார்கள். சிறுவன் வீரபத்திரன் “நாம மட்டும் ஏன் செருப்பு போடக் கூடாது என்று தன் அப்பாவிடமும் தாத்தாவிடமும் கேட்கிறான். சரியான பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை. இதே கேள்வியை மேலத்தெருவிலும் சென்று கேட்கிறான். செருப்பு வேணுமா? உங்களுக்கு? என்று மேல்சாதியினர் சிறுவனின் காதைத்திருகி அடித்தனுப்புகின்றனர்.
தினமும் தவறாமல் வீட்டில் நடக்கிற ஒரு செயல், காலில் குத்திய முள்ளை வாங்குவது கனவில் செருப்புகள் ஆலமர விழுதில் தொங்கிக் கொண்டிருக்க சிறுவன் ஆவலுடன் அருகில் சென்றதும் செருப்பு மறைந்துவிடுகிறது. கனவில் கூட அவன் செருப்பு அணியமுடியவில்லை. அவன் வாலிபனான பிறகும்கூட அந்த ஊரில் இந்தக் கொடுமை தொடர்கிறது.
ஒரு நாளாவது செருப்பில்லாமல் நடந்து பார்த்தால் தான் அவர்களுக்குத் தங்களின் வலி புரியும் என்று ஒருநாள் கோவில் வாசலில் இருந்த மேல்சாதியினரின் செருப்புகளை எடுத்து தூர வீசி எறிகிறான்.
பிறகு. அந்தக் கிராமத்திற்கு ஒரு இராணுவ வீரன் வருகிறான். அவன் காலில் அணிந்திருக்கும் மிடுக்கான பூட்சை பார்த்து தானும் இராணுவத்தில் சேர விரும்புகிறான் வீரபத்திரன். அந்த இராணுவ வீரனின் உதவியுடன் இராணுவத்திலும் சேர்ந்து விடுகிறான்.
முதல்முதலாக பூட்சு அவன் கைகளில் கிடைத்ததும் ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறான். விடுமுறையில் ஊருக்குத் திரும்பும் அவன் செருப்பில்லாமல் நடந்த அதே மேலத்தெருவில் பூட்சு காலுடன் ஓடி வருகிறான். மேல்சாதியினர் வழி மறித்து அவர்களது சாதிவக்கிரத்தைக் காட்டுகின்றனர்.
பட்டாளத்தில் சேர்ந்திட்டா சாதிமாறிடுமா? மரியாதையா பூட்சைக் கழட்டிட்டு நடந்துபோ.. இல்லைனா காலை வெட்டிடுவோம்” என்று மிரட்டுகிறார்கள். வீரபத்திரன் ஆவேசத்துடன் முறைத்துப் பார்த்தபடி ஊருக்குப்போனாலும் என்னை தினமும் ஓடி பயிற்சி பண்ண சொல்லியிருக்காங்க. யாராவது தடுத்தா போலீசுகிட்ட பிடிச்சுக் கொடுக்க சொல்லியிருக்காங்க பட்டாளத்தான் பிராது கொடுத்தா நீங்க வெளியே வரமுடியாது தெரியுமா? மீறி தடுத்தா காக்கா குருவி சுடறமாதிரி சுட்டுபுடுவேன். தைரியமிருந்தா தடுத்துப்பாருங்க என்கிறான்.
மேல்சாதிக்காரர்கள் பின்வாங்கி செல்கின்றனர். பிறகு கீழத்தெருவில் ஒவ்வொரு வாசலிலும் செருப்புகள் இருக்கின்றன.
இந்த நினைவுகளுடன் தாத்தா கீழத்தெருவில் தன் பேரனுடன் அவரும் செருப்பணிந்து கொண்டு நடந்து போகிறார். செருப்பின்றி தானும் தன்னினமும் பட்டவலியைத்தன் பேரனுக்கு உணர்த்த வேண்டும் என்ற நினைப்புடன் நடந்து செல்கிறார் இத்துடன் இக்குறும்படம் முடிவடைகிறது.
ஆழகிய பெரியவனின் குறடு சிறுகதையை சிறிது மாற்றத்துடன் போர்க்குணம் மிக்க குறும்படமாக எடுத்திருக்கிறார் பொன் சுதா.
நடந்த கதை
ழூலக்கதை : அழகிய பெரியவன்
இசை : மரியா மனோகர்
தயாரிப்பு : அருள்சங்கர்
திரைக்கதை : வசனம். இயக்கம் : பொன் சுதா
பொன் சுதா பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பணிபுரிந்த கலையனுபவம் உள்ளவர். தங்கர்பச்சானிடம் பள்ளிக்கூடம் படத்தில் கதை விவாதத்தில் இருந்திருக்கிறார். ஐந்து படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
கவிதை அல்ல காதல் (1998), நானும் நீயும் நாமானபோது (2008), மழையின் சுவடுகள் (2009), ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் கோவை விசயா பதிப்பகத்தில் வெளியாகி இருக்கின்றன. இனி அவருடன் ஒரு சிறு நேர்காணல்.
அழகிய பெரியவனின் கதையை குறும்படமாக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
 |
குறும்படங்களில் சமரசம் இல்லாமல் எண்ணிய கருத்துகளைச் சொல்லலாம் என்பதே குறும்படங்களை இயக்க காரணம் என் முதல் குறும்படம் மறைபொருள் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் நல்ல அறிமுகத்தையும் பாராட்டுகளையும் எனக்குப் பெற்றுத் தந்தது. இனிக்குறும்படங்கள் போதும் என்று பெரும்படத்துக்கான முயற்சியை செய்து கொண்டிருக்கும்போது அழகிய பெரியவனின் குறடு கதையைப் படித்தேன். |
சாதிய அடக்குமுறையை பற்றிய ஆவணப் படுத்துதலாக இருந்தது அக்கதை.
அதுமட்டுமல்ல தனக்கு இழைக்கப்பட்ட சமுக அநீதியை ஒருவன் எப்படி அறிவார்ந்த முறையிலே தகர்த்தெறிகிறான் என்ற கருத்தும் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது. அக்கதையைக் குறும்படம் ஆக்குவதன் மூலம் இன்னும் அதிகமான மக்கள் பரப்பைச் சென்றடையும் என்று எண்ணியதுதான் காரணம்.
உள்ளடக்க ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் இக்குறும்படம் நன்றாக வந்திருக்கிறது. நடந்தகதை உருவான அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே?
“இதற்கான பொருளாதாரத்தை தந்து தயாரிப்பாளரானார், இணையத்தின் மூலம் நண்பரான திரு அருள்சங்கர். அழகிய பெரியவனின் துணையோடு அவரது பேரணாம்பட்டிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படப்படிப்பு நடத்தினோம். குறும்படம் என்றாலும் மிகத் தரமான ஒரு படமாக வரவேண்டுமென்று உழைத்தோம். சக்கரைக்கட்டி, சித்து, பேசு போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான இராசாமதி தான் இதில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். நாடோடி படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஏ. எல். ரமேசு தான் நடந்தகதையின் படத்தொகுப்பாளர்.
மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் மற்றும் நேதாஜி தொடர்களின் இசையமைப்பாளர் தான் இதற்கு இசையமைப்பாளர்.
அனைவரின் முழுமையான உழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது.
இதற்கான கதை சொல்லியின் பின்னணிக் குரலுக்கு அண்ணன் அறிவுமதியைப் பயன்படுத்தி இருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து பேசிக்கொடுத்தார். மற்ற பின்னணிக் குரல்கள் எல்லாமே நண்பர்களாலேயே நிரப்பப்பட்டது. கதையின் முக்கியப் பாத்திரமும் தந்தையாய் நடித்த தயாரிப்பாளர், மற்றும் இன்னொரு நண்பர் தர்மா என்பவரைத் தவிர அனைவருமெ தொழில்முறை நடிகர்கள் இல்லை. அந்த கிராமத்து மக்களையே பயன்படுத்தி இருக்கிறோம்.
ஒரு குறும்படத்தின் வெற்றியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
வெளிவந்த வேகத்திலேயெ கிட்டதட்ட மக்களிடையே பத்து இடங்களில் திரையிடல்கள் முடிந்துள்ளன. தொடர்ந்து திரையிடல்களுக்கு கேட்டபடி இருக்கிறார்கள்.
படத்தையும், படத்தின் செய்தியையும் உணர்ந்து திரையிடல்கள் தொடர்வது நடந்த கதையின் படைப்புக்குழுவின் உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகவே நினைக்கிறோம்.
நடந்த கதை மக்கள் மனதில் நடந்தபடியே இருக்கும்.
குறும்படங்களின் வெற்றி என்பது விருதுகள் வாங்குவது மட்டுமல்ல மக்களைச் சென்றடைவதுதான்.
|
கதை மிகவும் அருமையாகௌள்ளது இந்தக்காலத்திலும் இப்படி இருக்கிறார்கலா?
அனுப்பியவர் ரவி on Friday, 27.11.09 @ 13:22pm
நடந்த கதை உணமையாகவே நடந்த கதை தான் என்பதை கேள்விப் பட வேதனையாக இருக்கிறது. பொன்.சுதா இயக்கத்தில் குறும்படம் மிக அறோமியாக இருக்கிறது. கட்டுரை அருமை.
அனுப்பியவர் Sudhan on Monday, 30.11.09 @ 09:52am