ஒரே ஒரு நாள்
சாஃப்ட்வேர் இஞ்சினியரின் ஒரு நாள் - அக்னிப்பார்வை
சமீபத்தில் அனைவரின் சாபத்துக்கும் உள்ளான ஒருத் துறை. அண்ணனுக்கும், தம்பிக்கும், காதலனுக்கும், காதலிக்கும், கணவனுக்கும், மனைவிக்கும், (இவர்களில் யாரவது ஒருவர் இந்தத் துறையில் பணிபுரிந்தால்) இடையில் ஏற்றத்தாழ்வுகளை, மனக்கசப்புகளை உருவாக்கி, சாபங்களை வாங்கிக் கொண்ட ஒருத் துறை.. ஆம் தகவல் தொழில்நுட்பத் துறை. பல விமர்சனங்கள் இருந்தாலும், தொய்வுகள் இருந்தாலும் தொடர்ந்து வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் மென்பொருள் துறை பற்றியும், அதில் நடக்கும் ஒரு நாள் நிகழ்வுகள் பற்றியும் இந்த இதழில் ஒரே ஒரு நாள் பகுதியில் அறிந்துக் கொள்ளலாம்.
ரவி மிகப் பெரிய ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியர், மாதத்திற்கு இ.எம்.ஐ போக, கை நிறைய காசு இருக்குமளவு சம்பாதிப்பவன். இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கும் இவனின் லட்சியம், ஏன் இப்பொழுது ஒடிக்கொண்டிருக்கும் கனவும் ஒன்றே ஒன்றே தான்.. ‘ஒரு நாளாவது காலை டிபன் சாப்பிட வேண்டும்’.
காலை, மணி 9. உடனடியாக எழுந்து ஆஃபிஸ் கிளம்ப வேண்டும். காலை டிபன் எல்லாம் ஆபிசில் தான். கண்ணில் மிச்சத் தூக்கத்துடன் காலை பொழுது தொடங்கும். அது எந்த நாளாக இருந்தாலும் சரி. என்ன திங்கட்கிழமை என்றால் ஞாயிறன்று ’நைட் அவுட்’ என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்; மற்ற நாட்களில் அதீத வேலை என்ற சலிப்புடன் புறப்பட தயாராக வேண்டும்.
காலை படுக்கையிலிருந்து எழும்போதே கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இஞ்சினியரின் (கம்ப்யூட்டர் என்று சொல்லவில்லை என்றால் ’சாஃப்ட்வேர்னா பனியன், ஜட்டியா?’ என பலரின் கேலிக்கு ஆளாக வேண்டிவருகிறது). தனித்துவம் தொடங்கிவிடும். ஐந்து நிமிடம்.. ஐந்து நிமிடம் என்று தவனை முறையில் தூங்கி, அலுவலக வண்டி வருவதற்கு, ஐந்து நிமிடம் முன்னர் எழுந்து அலுவலகம் சென்று!?!.. (அதிகாலை எழுந்து அரை மணி நேரம் முன்னரே ஆஃபிஸ் வரும் சில பழங்கள் அல்லது சில விதிவிலக்கு கேஸ்கள் ஐடி கம்பனியிலும் உள்ளன. சொந்த வண்டி இருந்தால் ’டிராபிக்கால லேட்’ என்ற காரணம் நிச்சயம்).
’காலை ஆஃபிஸ் சென்று சாப்பிட்டுக்கொள்ளலாம்’ என்பது வயிற்றை ஏமாற்றி, சிறிது நேரம் வேலை செய்ய வைக்க சொல்லப்படும் ஒரு பொய். பெரும்பாலும் காலை டிபன் ’நஹி’, ஐடி பாஷையில் சொன்னால் ‘மார்னிங் பிரேக்பாஸ்ட் ஸ்கிப்ட்’ அல்லது கொஞ்சம் கவுரவுமாக ‘டையட்’ என்று புளுகிக்கொள்ளலாம்.
காலை அலுவலகம் வந்தவுடன் முதல் வேலை மின்னஞ்சல்களை படிப்பது – போன ஜன்மத்தில் சிறிதேனும் புண்ணியம் செய்திருந்தால் அலுவலகத்தில் சொந்த மின்னஞ்சல்களையும் படிக்க வசதியிருக்கும், பாவாத்மா என்றால் அலுவலக மின்னஞ்சல் மாத்திரம் தான். வந்திருக்கும் அனைத்து மின்அஞ்சல்களையும் படித்தால் நேற்று நாம் எழுதி கிழித்த ப்ரொக்ராமில் என்னென்ன தவறு என்பது முதல் அடுத்த வருடம் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது வரையிலான வேலைகள் குவிந்திருக்கும். நல்ல நண்பர்களிடமிருந்து அசினின் ’ஹாட்’ புகைப்படங்கள் ஃபார்வாட் ஆகியிருக்கும். சில பழங்களிடமிருந்து ஏதோ ஒரு தன்னம்பிக்கை குட்டி கதையோ, அல்லது இன்றைய வாசகம் என அவர் சொன்னார், இவர் சொன்னர் என்று போட்ட தன்னம்பிக்கை வாசகமோ வந்திருக்கும். அனைத்தையும் படித்து அன்னறைக்கான வேலை என்ன என்று பிரிப்பதற்குள் ஒரு ப்ரேக் தேவைப்படும். ஒரு மெயிலுக்கு ஒரு பிரேக் எடுக்கும் அதீத கேஸ்களும் இருக்கும்..
சரி சரி அப்படி என்னத்தான் இந்த சாஃப்ட்பேர் இஞ்சினியர்கள் செய்கிறார்கள்?
ஒரு மன்னார் & கோ அல்லது ஒரு கெக்ரான் மெக்ரானோ இருக்கிறது. அவர்களுக்கு தங்கள் ஆபிஸ் கணக்கு வழக்கு பார்த்துக் கொள்வதிலிருந்து, தங்கள் வியாபாரத்தை விருக்தி செய்வது வரை கணிப்பொறியின் உதவி தேவைப்படும். அதற்கு ஒன்று கணிப்பொறி வல்லுனர்களை கொண்டு ஒரு தனி துறையை அவர்கள் கம்பெனியில் உருவாக்கலாம் அல்லது இது மாதிரியான வேலைகள் செய்வதற்காகவே உருவாக்கபட்டுள்ள ஏதாவ்து கம்பெனியிடம் வாடகை முறையில் தங்கள் வேலைகளை செய்துக்கொள்ளலாம்.
ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் பல வல்லுனர்களை வேலைக்கு எடுத்து, இந்த மாதிரி பல கம்பெனிகளுக்கு வெறும் சேவை சார்ந்த வேலைகள், அவர்களுக்கு தேவையான கணிப்பொறி ப்ரோக்ராம்களாக உருவாக்குவது, ஏற்கனவே உள்ள ப்ரோக்ராம்களை நாலு தட்டு தட்டுவது என பல வேலைகள் இருக்கும்.
இன்னொருபக்கம் மலைபோல் குவிந்துகிடக்கும் பிரச்சனைகளுக்கு புதிய தொழிட்நுட்பங்களை கண்டுபிடிப்பது. ஒரு நிறுவனத்தின் முழு தகவல் தொழிநுட்ப கட்டமைப்புகளை பார்த்துகொள்வது என பல ஆணிகள் உள்ளன. ஒவ்வொன்றாக புடுங்க வேண்டும்.. மன்னிக்க, சரி செய்ய வேண்டும்.
முன்னர் சொன்னனே மன்னார் & கோ அவரை க(ஷ்)ஸ்ட்டமர் அல்லது க்லைண்ட் என்று அழைப்பார்கள். அடடா.. அந்த க்ளைண்ட் ஒரு குட்டி ஹிட்லர். நாம் என்ன செய்தாலும் குறைசொல்வான் அதற்க்கு ஒரு மீட்டிங் வேறு வைத்து, திட்டி தீர்ப்பான். நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள், சம்பளமாக வாங்குகிற பாதி பணம் இப்படி திட்டு வாங்க மட்டும் தான்.. இப்படியே இன்னைக்கு என்னடா திட்டுவான் என்று நினைப்பதற்குள் ப்ரேக்……
காபி வித் அனு, வித்யா, ரேகா, அவரவர் திறமையை பொருத்தது. பசங்களுக்கு ஒரு தம், திறமையிருந்தால் தம் வித் அனு, வித்யா, ரேகா! ஒரு பதினைந்து நிமிடம்.
வந்திருக்கும் மின்னஞ்சல்களுக்கு உடனடியாக அனுப்ப வேண்டிய பதிலை அனுப்ப வேண்டும். ரிப்போர்ட் கேட்டிருந்தால் அதை தயாரிக்க வேண்டும். என்றோ செய்த வேலையை பற்றிய அப்டேட் கேட்கப்படலாம். போன வருஷம் திரிதியை, அஷ்ட்டமி நவமி நினைவிருந்தால் மெயிலை தேடுவது எளிதாக இருக்கும். இதை செய்து முடித்தவுடன், காலையில் ஏமாந்த அந்த வயிறு எனும் ஜீவன் இப்பொழுது உஷாராகி வேலை செய்ய மறுக்கும் (அதுவுமா?). மத்திய உணவிற்கு கிளம்ப வேண்டும்.
மத்திய உண்வு சாப்பிட செல்லுவது என்பது, ராஜராஜ சோழன் படையெடுத்து செல்வது போன்றது தான். ஒரு படையுடன் சென்று ஊறுகாய்க்கு பதில் எவனையாவது கலாய்த்துக்கொண்டு, சாப்பிட்டால் தான் 40 ரூபாய்க்கு வாங்கப்படும் அந்த சர்க்கரை போட்ட சாம்பார் இன்னும் இனிக்கும். இல்லை என்றால் அனாவசியமாக உணவின் மேல் கவனம் திரும்பி, உப்பில்லை, ஏன் நாம் சாப்பிடுவது உணவே இல்லை என்ற அதீத கண்டுபிடிப்புடன், வாழ்க்கை பற்றிய பல தத்துவங்காளை உருவாக்க வேண்டிய ஒரு ஞானி ஆக வேண்டிய வாய்ப்பு வரும்.
மத்திய உணவருந்த படையைத் திரட்ட வேண்டுமே? ஒருவன் நான்காவது மாடியிலிருப்பான். இன்னொருத்தன் அடுத்த கட்டிடத்தில் இருப்பான். அனைவரையும் ஒன்று போல் சேர்ப்பதற்க்குள் ஒரு கல்யாணத்தை செய்து பார்த்துவிடலாம். என்னவென்றே தெரியாது, அத்தனை நேரம் வாராத வேலை சாப்பிட போகும் போது தான் ஒருத்தனுக்கு வந்து தொலையும்.
மத்தியம் சாப்பிட்டு முடித்து நம்ம இடத்திற்கு வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். அது பாருங்கள், கீபோர்டை அப்படி இப்படி தட்டுவதற்குள் மாலை வந்திருக்கும், மீண்டும் காபி வித்…..
எல்லாம் முடிந்த பிறகு தான் செய்ய வேண்டிய வேலை பற்றிய ஒரு விதமான ப்ளான் வந்திருக்கும் அப்புறமென்ன, கொடுத்த காசுக்கு கூவ வேண்டியது தான். என்ன அந்த வேளையை செய்து முடிக்க மாலை.. இரவு.. நடுநிசி ஆந்தைகள், பேய்கள். ஒரு வேளையாக தோதாக வேலை முடித்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்களை அனுபிவிட்டு கிளம்பலாம். ஆனால் இப்பொழுது தான் மிக முக்கிய வேலை ஒன்று பாக்கியிருக்கிறது.
’டைம்ஷீட்’- கால அட்டவனை இது தான் நமக்கு சம்பளம் பெற்று கொடுக்கும் ஜீவன். நாம் காலையெழுந்து பல் துலக்கியது நீங்கலாக, அனைத்து பாவம் மற்றும் புண்ணியங்களை நியாபகப்படுத்தி அன்று செய்து கிழித்த அத்தனை வேலைகளையும் பட்டியலிட்டு கம்பெனிக்கு ஒன்றும், நமக்கு படியளக்கும் இன்னொரு ஜீவனான கஸ்டமருக்கு ஒன்றுமாக அனுப்பிவிட்டு வெளியே வந்து தம் போட்டால் தூக்கம் கண்ணை சொக்கும்…
மறு நாள் காலை மீண்டும் கண்ணில் மிச்ச தூக்கத்துடன் எழுந்து….. |
appattamana padhivu. unmai nilaiyai azhagaga vivarithu irukireergal agni. nice article.
அனுப்பியவர் selvan on Monday, 4.01.10 @ 08:33am