சிறந்த சினிமா..
- மரியம்
திரைப்படங்கள் என்று சொன்னால் ஏதோ வேற்று மொழியில் பேசுவது போல் பலர் பார்க்கின்றனர். எனவே அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே, தமிழிலேயே!!? சினிமா என்றே அழைப்போம்.
இன்றைய சூழலில் பல திரைப்பட இயக்கங்கள், திரைப்பட விமர்சகர்கள் என அனைவரும் முன் வைக்கும் விஷயம். தமிழில் சிறந்த திரைப்படங்கள் உலக சினிமாக்கள் வரவில்லை என்பதே. ஒன்றும் தெரியாத கத்துக்குட்டிகள் கூட (இந்த வார்த்தை யார் மனதையும் புண்படுத்த அல்ல.) ஒரு நாலைந்து உலகப் படங்களைப் பார்த்து விட்டு இங்கு தமிழில் இது போன்ற படங்களே வரவில்லை என்று அங்கலாய்ப்பது கொஞ்சம் அதிகம் என்றே படுகிறது.
குழந்தைகள் பற்றிய ஒரு ஈரானியப் படம். உலகப் படம் பற்றி பேசும் எல்லோருக்கும் பெயர் தெரிந்து இருக்கும். ஒரு நீளமானக் காட்சியை தவிர வேறு எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத படம். நல்ல படைப்பு. அருமையான நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, இயக்கம். உண்மைதான். என்னுடைய கேள்வி அதேப் படத்தை தமிழில் எடுத்தால் எதனை பேர் அந்தப் படத்தை போய் திரையரங்கில் பார்ப்பீர்கள். உலகப் படம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள் கூட அந்தப் படத்தை திரையரங்கில் போய் பார்க்கமாட்டார்கள். இவர்களை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.
அது வேறொரு நாட்டுக் கலாச்சாரம். அது முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் திரைப்படங்களில் நடிப்பது அரிது. அதுவும் நடிக்கும் பெண்களில் கால் தெரிந்தால் கூட அங்கே அது ஒரு குற்றம். அதனால்தான் அனைவரும் போட்டிப் போட்டுக்கொண்டு அங்கே குழந்தைகள் பற்றியப் படம் எடுக்கிறார்கள். அதே போன்றொரு முயற்சிதான் நமது கலாச்சாரம் சார்ந்து தமிழில் இப்போது ஒரு படம் வந்தது. "பசங்க" அதற்கு நீங்கள் தந்த வரவேற்பு எப்படி. வெறும் மனத் திருப்தியை வைத்துக் கொண்டு ஒரு தயாரிப்பாளரால் வாழ்ந்து விட முடியாது. விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் எடுங்கள். அதை நீங்கள் எதிர்பார்க்கும் விதம் எடுங்கள். முடிகிறதாப் பார்ப்போம்.
திரைப்படம் என்பது ஒரு பொழுதுப்போக்கு சாதனம். அதில் ஏதேனும் நல்லது நடந்தால் வரவேற்க வேண்டியதுதான். அதற்காக எடுக்கிறப் படங்கள் அனைத்தும் கருத்துள்ள படங்களாகத்தான் வரவேண்டும் என்றால் அனைத்து படங்களையும் பார்ப்பது யார்?
சிறந்தது எது?
இது திரைப்படத்திற்கு மட்டுமல்ல.. அனைத்துக்கும் பொருந்தும். எது சிறந்தது என்பதை யார் முடிவு செய்வது. பெரும்பாலானவர்கள் சொல்வதே சிறந்தது என்கிற முடிவுக்கே வருவோம். எது பெரும்பாண்மை? ஒரு வட்டத்தில் ஐந்து நபர்கள் உள்ளார்கள் என்றால் அதில் நான்கு அல்லது மூன்று நபர்கள் சொல்வதே சிறந்தது என்றாகலாம். மீதமுள்ள இரண்டு அல்லது ஒரு நபர் சொல்வது சிறந்தது அல்ல.. ஆனால் அந்த வட்டத்தை விட்டு வெளியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிராகரிக்கப்பட்ட அந்த ஒன்று அல்லது இரண்டு நபர்கள் சொல்வதே சிறந்தது என்று சொல்கிறார்கள் என்றால்?. இங்கே வெளியில் உள்ளவர்கள் சொல்வது யார் காதிலும் விழுவது கிடையாது. அந்த வட்டத்தில் உள்ளவர்கள் சொல்வதே அவர்களுக்கு வேத வாக்கு.
பிறகு எப்படி அது பெரும்பாண்மை ஆகும். சிறந்தது எது என்பதை எப்படி அடையாளம் காண்பீர்கள்.
அடுத்து தமிழ் திரைப்படங்களில் வெளிவரும் பாடல்கள் பற்றி:
உலகில் வேறெந்த மொழிகளின் திரைப்படங்களிலும் பாடல்களே வெளிவராதது போன்று இங்கே உள்ளவர்கள் ஏமாற்றிக் கொண்டு திரிவார்கள். எல்லா மொழிப் படங்களிலும் பாடல்கள் உண்டு. ஆனால் இங்கே கொஞ்சம் அதிகம். காரணம் நமது சூழல். இங்கே பிறந்தாலும் பாடல், இறந்தாலும் பாடல், கல்யாணம் என்றாலும் பாடல், குழந்தை பிறந்தாலும் பாடல், எதற்கெடுத்தாலும் பாடல். ஆம் அதுதான் நமது ரத்தத்தில் கலந்த உண்மை. அது நமது சொத்து. நம்மை உற்சார்கம் ஊட்டுவது, சோர்ந்துப் போன நேரங்களில் நம்மை தூக்கிப் பிடிப்பதும் அந்தப் பாடல்களே. உலகில் அதிகம் மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என்கிறது புள்ளிவிவரம். நூற்றுப் பத்துக் கோடி மக்கள் உள்ள தேசத்தில் மனநிலை பாதித்தவர்கள் குறைவு. ஆனால் முப்பது கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்காவில் மனநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். காரணம் இதுவாகவும் இருக்கலாம். நம் மனநலத்தை பேணுவது நமது இரத்தத்தோடு கலந்தப் பாடல்களே.. பாடல்கள் இல்லாத படங்கள் ஏன் வர வேண்டும். நிச்சயம் பாடல்கள் வேண்டும். ஆரம்பக் காலம் முதலே அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தின் மோகம் கொண்டு அலையும் நம்மவர்கள் இப்போது திரைப்படங்களிலும் அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தையே விரும்புகின்றனர்.
மென்பொருள் துறை ஊழியர்களே இந்நாட்டுக் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று கூவும் இந்த கோழிகளுக்கு ஏன் தெரியவில்லை நாமும் அதையே தான் செய்கிறோம் என்று. அணியும் ஆடைகளில் கலாச்சார சீர்க்ட்டை எதிர்க்கும் இவர்கள் எப்படி திரைப்படங்களில் மட்டும் அந்நிய கலாச்சாரத்தை வரவேற்கிறார்கள்.
அதுவும் ஒரு சில மேதைகள் பேசும்போது "அகிரா குரசோவா... ஐசன்ஸ்டீன்.. ஆகியோரைப் பாருங்கள்.. இங்கே பாருங்கள்..என்று உரக்கக் கூவிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் நம்மைப் பார்க்கட்டுமே.. செண்டிமெண்ட், காதல், சோகம், போன்றவையெல்லாம் இந்த தேசத்து மக்கள் ரத்தத்தில் கலந்துப் போன ஒன்று. அதற்கு ஏற்றாற்போல்தான் இங்கே படங்கள் தயாரிக்க முடியும். அதையும் தாண்டி உலகப் படங்கள், அகிரா.... என்று பேசுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்று தங்கிவிடுங்கள். இந்த தேசம் உங்களுக்கு நன்றி சொல்லும்.
விமர்சனம் என்பது விளக்கைப் பிடிப்பது போன்று. எங்கே எப்படி பிடிக்கிறோம் என்பது முக்கியம். இருண்ட பக்கங்களில் விளக்கைப் பிடித்து அடுத்த முறை அந்த தவறுகள் நேராமல் செய்வதே விமர்சகர்கள் கடமை. அதை விடுத்து விளக்கை தூக்கி எரிந்து அவர்களை உயிரோடு கொளுத்துவதல்ல விமர்சனம்..
உங்களுக்கான ஒரு கூட்டம் சேர்ந்தால் அதை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துங்கள்... தவிர்த்து உங்களை முன்னிலை படுத்த ஒன்றும் தெரியாத அப்பாவிகளை பகடைக் காயாக பயன்படுத்தாதீர்கள்.. |
ingu vimarsanamgalai vimarsikkapattulladu..nalla cinema endra title pottu vitu,kobamana vimarsanam seyya pattulldu. en karuthu indraya director BALA vin padangalai pol irukka vendum.
அனுப்பியவர் yuvaraj.c on Friday, 11.12.09 @ 19:01pm