வாயில் தொடர்புக்கு  
அறிவிப்பு
கூடு மூன்றாம் இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. அடுத்த இதழ் 11-01-10 அன்று பதிவேற்றப்படும்
 
     
  தலையங்கம்  
  கட்டுரைகள்  
  ஊஞ்சல்
- கலாப்ரியா
  'தமிலி'ல் பேசினால் தப்பா?
- தமிழ்மகன்
  கறுப்புப் பாலைவனம்
- சமயவேல்
  என் பேனாவின் கால் தடங்கள்
- பூபதி
  பொது  
  பா - ஒரு பார்வை
- அபிலாஷ் சந்திரன்
  திரைக்கதை  
  கடந்து வந்த பாதை  
  கழுகுப்பார்வை  
  ஒரே ஒரு நாள்  
  ஒளிப்படங்கள்  
  ஓவியக் குறும்பு  
     
     
     
   
 
1
சீனிவாசன் சிறப்பிதழ்
  சிறப்புக் கட்டுரை - 1  
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள
  வகைகள்
  கூடு சிறப்பு இணைப்புகள்
  கடந்த இதழ்கள்
   
 

   
     
   
     
   

பலுபலுக்கன்மா? -  தமிழ்மகன்

ஒரு மொழியின் உச்சபட்ச பயன்பாடு விளம்பரங்களில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே ஒரு சொல் மனிதர்களை ஆட்டிப் படைத்துவிடுகிறது. தெறிக்கும் நட்சத்திர பிரகாசப் படத்தின் நடுவே "இலவசம்" என்று பெரிதாக எழுதியிருந்தால் உடனே மக்கள் ஒரு கணம் அங்கே உறைந்து போகிறார்கள்.

அது, ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசமாக இருக்கும். ஒரு வீடு வாங்கினால் ஒரு வீடு இலவசம்... ஒரு பேப்பர் வாங்கினால் ஒரு பேப்பர் இலவசம்... எதுவாகவும் இருக்கலாம். நம்மில் பெரும்பான்மையானவர்கள் அதற்கு முன்னால் எத்தனை அனுபவம் அடைந்திருந்தாலும் அதிக வட்டிக்காக ஒரு பெனிபிட் ஃபண்டில் மீண்டும் மீண்டும் பணத்தைப் போடுகிறார்கள். பளிச்சிடும் வெண்மை தரும் என்று புதிய சோப்பை வாங்குகிறார்கள். நான்கே நாள்களில் சிவப்பாக மாறிவிடலாம் என்று புதிய கிரீமை வாங்குகிறார்கள். இந்த விளம்பரங்களை நம்பி ஏமாறுகிறவர்கள் பற்றி எழுத வேண்டியது தனிக் கட்டுரை... இங்கே அந்த விளம்பரத்தில் நாம் எதிர் கொள்ளும் தமிழைப் பற்றியதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு விளம்பரம்.

ஒரு சிவந்த பெண்மணி சீரியஸான முகத்துடன், ""உங்களுக்கு ஸ்பூன் பலுபலுக்கன்மா... துண்மினி பலுபலுக்கன்மா?'' என்று கேட்டுவிட்டு "எங்கள் சோப்பப் போட்டா துணிலாம் பலுபலுக்கும்'' என்றார்.

அது ஒரு சோப்பு விளம்பரம் என்பது புரிந்தது. ஆரம்பத்தில் பலுபலுக்கன்மா என்கிறாரே அது என்ன என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

டி.வி. பார்க்கிற சிலர் சோப்பில் இருக்கும் ஏதோ முக்கியமான மகத்துவம் பற்றிச் சொல்கிறார் என்று விளக்கம் சொன்னார்கள். அப்படி என்ன ரசாயனமாக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. கடைசிவரை எனக்குத் தெரிந்த "கெமிஸ்ட்ரி எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை'.

பிறிதொரு நாள் வேறு ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும்போது என் குழப்பத்துக்கு விடை கிடைத்தது.

அது இன்னொரு சோப்பு கம்பெனியின் விளம்பரம். அந்த சோப்பை வாங்கினால் ஒரு ஸ்பூன் இலவசம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முன்னர் பார்த்த சோப்பு விளம்பரத்தில் என்ன சொல்கிறார்கள் என்பது வேகமாக விளங்க ஆரம்பித்தது. கெமிஸ்ட்ரிக்கு பதிலாக லாஜிக் ஒர்க் அவுட் ஆனது...

சோப்பு வாங்கினால் இலவசமாக ஸ்பூன் தருகிறார்கள். அதை நம்பி அந்த சோப்பை வாங்குகிறீர்களே... உங்களுக்கு ஸ்பூன் பளபளக்க வேண்டுமா? துணி மணிகள் பளபளக்க வேண்டுமா? என்பதைத்தான் முந்தைய விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே சொன்னதுபோல் ஸ்பூன் என்பது தூண்டிலில் வைக்கும் புழு. இலவச ஸ்பூன் என்பதை வைத்து ஒருவன் சோப்பு விற்கிறான். அது எப்படியோ போகட்டும்.

நம்முடைய அடுத்த கவலை.. இப்படியான தமிழை நம் தலையில் கட்டுவதைப் பற்றியது.

இதைக் கேட்கிற குழந்தைகள் "பளபளக்க வேண்டுமா?" என்று கேட்பதைவிட "பலுபலுக்கன்மா?' என்று கேட்பதில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதையே ரசிக்கிறார்கள். இது ஒரு ஆபத்தின் அறிகுறியாக இருந்தது. நல்ல வேளையாக அந்த சோப்பு நம் மக்களிடம் வெகுநாட்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் அந்த விளம்பரமும் அல்பாயுளில் முடிந்து போனது.

இப்போது விளம்பரம்...

இரண்டு குழந்தைகள் வீட்டு வாசல்படியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கின்றன. பெரியவன். இளையவள்.

இளையவள் கேட்கிறாள்..""அணா, நாமப்பயேன் தொங்கறம்?''
"அம்ம பாக்கணும்னுதான்''
"அம்ம பாத்தா என்னாஹும்''
"அம்ம நமக்கு காம்ப்ளான் குடுப்பாங்க''
புத்திசாலித்தனமான குழந்தைகள். தம்முடைய அம்மாவுக்குத் தாங்கள் உயரமாக வளரவிரும்புவதை இப்படித் தொங்குவதன் மூலம் உணர்த்துகிறார்கள்.

ஹிந்தியில் தயாரான இந்த விளம்பத்தில் இந்தக் குழந்தைகள் இதே போல் புத்திசாலித்தனமாகத்தான் உணர்த்தியிருப்பார்கள். தமிழில் மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் இருந்தது.

இந்தக் குழந்தைகளுக்காகத் தமிழில் வேறு இரு குழந்தைகள் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால் உச்சரிப்பில் ஒருவித வசீகரிக்கும் தவறு இருக்கிறது. இப்படி வித்தியாசமான குரல்களை மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகே விளம்பரப் படம் எடுப்பவர்கள் கண்டெடுப்பதாக அறிந்தேன். விளம்பர வசனங்கள் சட்டென ஈர்த்து நிறுத்த வேண்டும் என்பது விளம்பரதாரர்களுக்கு முக்கியமான கோரிக்கை. எங்க சேனலில் சன் டி.வி., கே.டி.வி., சன் மியூஸிக் எல்லாமே தெரியும்... என்று கூறிவிட்டு டண் டணா டன் என்று சொல்வது இதற்காகத்தான். வினோதமான குரலில் விபரீதமாக எதையாவது சொல்ல வேண்டும்.

ஒரு பெயிண்ட் கம்பெனி விளம்பரம். இந்த பெயிண்டைத் தடவிவிட்டால் எவ்வளவு புழுதி பறந்தாலும் சுவரின் மீது தூசு ஒட்டாது என்பது விளம்பரம் செய்ய வேண்டிய செய்தி.

துணிச்சலான மன்னர். அவரை நோக்கிப் புழுதிக்கால் பிடறிப்பட ஓடி வருகின்றன சில நூறு குதிரைகள். அரசர் அசையாமல் நிற்கிறார். கூட்டமாக நிற்கும் மக்கள் அவருடைய துணிச்சலை வியக்க வேண்டும். ஆனால் புழுதியால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் மன்னரை கவனிக்காமல் அவருக்குப் பின்னால் இருக்கும் மாளிகை தூசி படாமல் ஜொலிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருவன் சொல்கிறான்... "மாலிக... மாலிக மின்னுது'' அதாவது எவ்வளவு தூசு பட்டாலும் மாளிகை மின்னிக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படி வினோதமாகச் சொல்கிறான்..

இப்படியான பிழையான தமிழில் பேசுவதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் மும்பையில் தயாராகின்றன. பெரும்பாலும் இந்தி பேசும் சூழலில் இந்த விளம்பரங்கள் உருவாகின்றன. பின்பு அதே விளம்பரங்கள் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஓரிய, கன்னடம் என மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி தெரிந்த அந்தந்த மொழிக்காரர்களை அணுகி வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள். இப்படி மொழி பெயர்க்கும்போதே சில நேரங்களில் தவறு நடந்துவிடும். பிறகு அந்தத் தவறான தமிழை உச்சரிக்க அங்கேயே உள்ள மாநில மொழிப் பேசுபவர்களை அணுகிறார்கள். மும்பையில் செட்டிலாகி, தங்கள் பிராந்திய மொழியை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் வாயின் வழியாக அது மேலும் தவறாக மாறி, நம்மை வந்து அடைகிறது. இது இன்னொரு வகை ஆபத்து.

விளம்பரங்கள் குழந்தைகளை எளிதில் வசீகரிக்கக் கூடியவை. செய்திகளோ, வயலும் வாழ்வு நிகழ்ச்சியோ, நேருக்கு நேர் அரசியல் அரங்கமோ அவர்களை அவ்வளவாகத் தூண்டுவதில்லை. இந்த விளம்பரத் தமிழ் குழந்தைகளை பாதிக்கும் என்றேத் தோன்றுகிறது. தூசுகளை அண்டவிடாத பெயிண்டுகளையோ, அழகுத்தரும் கிரீமையோ விற்பதாகச் சொல்லி இப்படி ஆபத்தை வரவேற்கலாமா?

மேலும் ஒரு சொல் நமக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள் தரக்கூடியதாக இருக்கிறது. சிங்கம் என்ற சொல் ... இந்த நான்கு எழுத்துகள் நம் கண் முன் ஒரு உருவத்தை கொண்டு வந்து நிறுத்துகிறது. அது காட்டில் வாழும். மான்களைக் கடித்துத் தின்னும். குகைக்குள் படுத்திருக்கும் என்று பல்வேறு எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் ஒரு மனிதனைக் காட்டி சிங்கம்யா அவன் என்பதையும் கேள்விப்படுகிறோம். அவனும் காட்டுக்குள் குகையில் படுத்து உறங்குவான் என்ற எண்ணமோ, மான்களை விரட்டிச் சென்று கடிப்பான் எண்ணமோ ஏற்படுவதில்லை. மாறாக அவனை வீரன் என்று பழக்கப்படுத்திக் கொள்கிறோம். எழுத்துகளை மாற்றி உச்சரிக்கும் போது அது வேறுசில குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே விளம்பரதாரர்கள் சரியாக பிரயோகிப்பது நல்லது.

நான்கு எழுத்துகளின் சேர்க்கை ஒருவனை கோபமூட்டுவதாகவோ, மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகவோ மாறிவிடுகிறது. ஒருவனை முட்டாள் என்றதும் கோபப்படுகிறான். அறிவாளி என்றால் சந்தோஷம் அடைகிறான். சொல் என்பது வெறும் அர்த்தம் மட்டுமில்லை. அது நிறைய உணர்வுகளை வழங்குவதாக இருக்கிறது.

கொஞ்ச நாளைக்கு முன் புதிதாக ஒரு மிக்ஸி விற்பனைக்கு வந்தது. வட இந்தியரின் கம்பெனி அது. மிக்ஸியின் பெயர் "கஞ்சன்'. இங்கு யாருமே அதை வாங்கவில்லை. தமிழ் நாட்டில் ஏன் யாரும் கஞ்சன் மிக்ஸி வாங்கவில்லை என்பது தெரியாமலேயே அந்த கம்பெனி மூடப்பட்டுவிட்டது.

 

-------------------------------------------------------------------------
 

தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. அப்படியான படைப்புகள் மட்டுமே கூடு இணைய இதழில் வெளியிடப்படும். படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும்.

6 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

miga arumaiyaga irukirdhu. paditthuvittu vizhundh vizhundhu sirithen tamil magan sir. nagaicchuvai ezhuthil idhu ungalin innoru parimaanam. arumai.

அனுப்பியவர் Hem nath on Wednesday, 30.12.09 @ 03:32am

miga sirappaga naiyaandiyudan eluthiyullergar. kadaisi punch superb. neengalthaan punch pidhaamaagan ayitre. :)

அனுப்பியவர் Mani on Monday, 4.01.10 @ 00:02am

nalla naiyandi katturai. ungal ezhuthil miga azhagana nagaichuvai olindhuk konde thannai nilai niruthugiradhu tamil magan sir. excellent

அனுப்பியவர் Sundar on Monday, 4.01.10 @ 08:09am

tamilaga arasin virudhu petradharku valthugal sir. ungalin indhak kattraikku vasagargalaagiya naangal virudhu kodukkirom. miga aruamiyana padhivu. nakkal, naiyaandi ellam sagajamaaga irukkiradhu. miga azhagu. excellent article sir.

அனுப்பியவர் Bala on Monday, 4.01.10 @ 10:48am

palupalukkanma.. adadaa.. mudhal vari paditthu edho aaraichik katturai enru ninaitthuvitten. aanaal migundha nagaicchuvaik konda katturai. adhe samayam mozhiyin meedhulla patrudhalaiyum velippadutthugiradhu. valthugal sir.

அனுப்பியவர் Senthil T.K on Monday, 4.01.10 @ 21:59pm

vilambarangal patri pudhiya paarvai. miga azhagaaga uvamaigal, vaarthaigal.azhagu tamil magan sir.

அனுப்பியவர் Madhavan on Wednesday, 6.01.10 @ 00:21am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.