உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 1
தன் சகோதரி எப்போதும் தன் மகனைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். என்று கூறி உளவியல் ஆலோசனை பெற நேரம் கேட்டார். அவர் சகோதரியைப் பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு அவரிடம் கேட்டேன்.
இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வயதுக்குட்பட்ட அவர் சகோதரிக்கு தற்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். தற்போது அப்பெண் கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய கணவர் அழகுசாதனப் பொருட்களை விற்கும் கடை நடத்தி வருகிறார். பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் மகன் வீட்டிற்கு வந்ததும் தாய், மகன் இருவரும் தங்கள் கடைக்குச் செல்வர். கடையில் அப்பெண் தன் கணவருக்கு உதவியாக இருக்க, சிறிய பையன் விளையாட்டுப் பொருட்களை வைத்து கற்பனையாக விளையாடிக் கொண்டிருப்பான். சுமார் 10 மணிக்கு அனைவரும் வீடு திரும்பி உணவருந்திவிட்டு படுக்கச் செல்வர். பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் வேலைகளை முடிக்க அப்பெண் தன் மகனுக்கு உதவி செய்வார். பாடம் சொல்லிக் கொடுப்பது தாயாரின் பணி. தந்தை இவ்விசயத்தில் எப்போதும் தலையிடுவதில்லை. நன்றாக படித்துக் கொண்டிருந்த தன் மகன் தற்போது மதிப்பெண் குறைவாக வாங்குகிறான் என்பதால் கவலையுற்ற அப்பெண் மகனை படிக்கவைக்க வேண்டி அவனை அடித்து துன்புறுத்த ஆரம்பித்துவிட்டார். தன் மகனை தானே அடித்து துன்பப்படுத்துவதால் கவலையுற்ற அப்பெண் தன் சகோதரி மற்றும் உறவினர்களிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் என்பதே தற்போதைய பிரச்சனை.
பிரச்சனையை கேட்ட நான் சிறு பையனிடம் எந்த உளவியல் குறையும் இல்லை, தந்தையும் தாயும் மட்டும் ஆலோசனை பெற வந்தால் போதும் எனக் கூறி பெற்றோர்களை மட்டும் ஆலோசனை பெற வருமாறு கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து பெற்றோர் இருவரும் ஆலோசனை மையத்திற்கு வந்தனர். அப்பையனின் தாய் தான் மிகுந்த கவலையுற்றிருப்பதாக கூறி “தன் மகன் 7 வயது நிரம்பியவன். தற்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். LKG, UKG மற்றும் முதல் வகுப்பு படித்த போது எப்போதும் நுற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்று வந்தான். ஆனால் தற்போது அவன் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளதாக கருதி அவனை நன்கு படிக்க வைக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் படிக்க உட்கார்ந்தாலே என் மகன் எந்த காரணமுமின்றி அழுகிறான். மேலும் சரியாக சாப்பிடுவதில்லை. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் அடித்து சாப்பிட வைக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து அடித்து அவனை துன்புறுத்துவது எனக்கு மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்துகிறது என்று தன் பிரச்சனையை கூறி தான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புவதாக சொன்னார்.
பிறகு அவர்களிடம் நான் கேட்ட கேள்விகள் மூலம் அப்பையன் பிறரிடம் அதிகமாக பழகாமலும் தன் வயதையொத்த குழந்தைகளுடன் விளையாட வாய்ப்பு இல்லாமலும் இருப்பதும், தந்தை குழந்தை வளர்ப்பு விசயங்களில் தலையிடுவதில்லை என்பதும் தெரியவந்தது.
அப்பெண்ணின் தற்போதைய பிரச்சனைக்கு முழுக்க முழுக்க காரணம் அப்பெண்மணிக்கு சரியான குழந்தை வளர்ப்பு முறை தெரியாததுதான். வேலைக்கு எதுவும் போகாமல் வீட்டில் குடும்பத் தலைவியாக உள்ள அப்பெண்ணுக்கு 24 மணி நேரமும் தன் மகனைப் பற்றியே நினைப்பு “நீங்கள் எப்போதும் உங்கள் மகனைப் பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறீர்கள். அவனின் படிப்பு பற்றி இப்போதே மிக அதிகமாக் கவலைப்பட வேண்டாம். சிறிய வகுப்புகள் படிக்கும் போது பெற்றோர்களுக்கு குழந்தைகளின் பாடம் நன்கு புரியும் அதனால் அதிக அக்கறை எடுத்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து நிறைய மதிப்பெண் வாங்க வைத்து விடுவார்கள். அக்குழந்தைகள் உயர் வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் ஒன்றும் தமக்குப் புரியாததால் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கொள்வர். அப்போதுதான் குழந்தையின் உண்மையான நுண்மதி தெரிய வரும். தற்போது நீங்களும் அவ்வாறே செய்துள்ளீர்கள். எனவே தற்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் குழந்தைக்கு இரண்டு மணி நேரம் அமர்ந்து படிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டியதுதான். அதை மட்டும் செய்து வந்தாலே பிற்காலத்தில் உயர் வகுப்புகளுக்கு செல்லும் போது தானாகவே முயன்று நல்ல மதிப்பெண் பெறுவான். அதற்கான நுண்மதி அவனிடம் உள்ளது என்பதை அவன் தான் கேட்ட விசயங்களையும் பார்த்தவற்றையும் வைத்து கற்பனையாக் உங்கள் கடையில் விளையாடுகிறான் என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மற்றபடி படிப்பு சொல்லிக் கொடுப்பதை வீட்டில் வைத்துக்கொள்வது நன்று. 6.30 மணிக்கு தொடங்கி 8 மணிக்கு சரியாக படிப்பதை முடித்துக்கொள்ள வேண்டும். உங்கள் மகனே அதற்குமேல் படித்தாலும் கூட நீங்கள் அனுமதிக்க வேண்டாம். ஒன்பது மணிக்குள் அவன் உணவருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுமாறு பார்த்துக் கொள்வது நன்று. உணவு உண்ணாமல் இருப்பது பற்றி நீங்கள் அதிக கவலை கொள்ள வேண்டாம். அவன் உடலில் உணவுக்கான அவசியம் இல்லாததன் காரணமாகவே அவன் உண்பதில்லை. நன்கு பசியிருந்தால் தானாக உணவு உன்ன ஆரம்பித்துவிடுவான். எனவே அவன் தேவையான அளவு மட்டும் உணவு உண்பதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நாளடைவில் இது சரியாகி விடும்.
உங்கள் மகன் மீது தற்போது அதிகமாக கவணம் செலுத்தி வரும் நீங்கள் கர்ப்பகாலம் முடிந்து இரண்டாவது குழந்தை பெற்ற பின்னர் இதே அளவு கவணத்தை செலுத்த இயலாது. அப்போது உங்கள் மகன் தன்னை நன்கு கவணித்துக் கொண்ட அம்மா தற்போது கண்டு கொள்வதில்லை என்று எண்ணலாம். அவ்வெண்ணம் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவே இப்போதிருந்தே உங்கள் மகன் தனித்தியங்குமாறான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது நன்று” என்று ஆலோசனை கூறி அவர்களை அனுப்பிவைத்தேன்.
ஒவ்வொரு குழந்தையையுமே நன்கு படிக்க வைத்து முதல் மாணவனாகவும், நிறைய உண்ண வைத்து பயில்வானாகவும் ஆக்க முயலும் அக்கறையுள்ள தாய்மார்களே! அதைவிடுத்து மரம் ஒன்று இயல்பாக வளர்வதைப்போல மலர் ஒன்று இயற்கையால் மலர்வதைப் போல் உங்கள் குழந்தையை முழு மனிதனாக வளர விடுங்கள்.
|
சிறப்பான முயற்சி.. ஆனால் மிக மேலோட்டமாக இருப்பதாக உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் டீடைலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
அனுப்பியவர் சந்தோஷ் on Saturday, 24.07.10 @ 22:36pm
Kulandhaigal mananilaiyai purindhuk kolla idhup ponra katturaial avasiyam. ungal pani thodarattum.
அனுப்பியவர் Meena on Sunday, 25.07.10 @ 21:58pm
nalla katturai. idhil vaasagargal kelvi ketkavum vagai seiyalame? thangal kulandhaigal kurithu niraya per kelvik ketka koodum.
அனுப்பியவர் Sudhakar on Sunday, 25.07.10 @ 22:28pm
kuzhandhaigal adam pidippadhu yen? avargalai eppadi vazhikku kondu varuvadhu? enbadhu patri aalosnai undaa?
அனுப்பியவர் Mangai on Sunday, 25.07.10 @ 22:58pm
muyarchi sirakka valthugal. innum detailaga irundhal nanru.
அனுப்பியவர் Mani on Monday, 26.07.10 @ 03:42am
திரு சுதாகர் அவர்களுக்கு:
குழந்தைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராகவே உள்ளேன். கேள்விகளை கேளுங்கள்
திரு மங்கை அவர்களுக்கு:
உங்களின் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையுடன் சேர்த்து எழுதுகிறேன்.
நன்றி
பா.செல்வராஜ்
அனுப்பியவர் பா.செல்வராஜ் on Tuesday, 27.07.10 @ 03:27am
Pls inform me the Publisher of your book: மனதை மேம்படுத்தும் ம்னோதத்துவம், its availability in Bangalore.
sridharan
அனுப்பியவர் Sridharan on Tuesday, 18.01.11 @ 01:31am