ரசிகும்படியான ராஜதந்திரங்கள்!
ஒரு செயல் நடக்கும் போது, அந்த செயல் நிகழ்ந்ததற்கான காரணம் ஒன்று சொல்லப்படும். ஆனால் உண்மையில் காரணம் வேறொன்றாக இருக்கும். அந்த உண்மையான காரணத்தை நீங்கள் உணரத்தொடங்கிவிட்டால் உங்களுக்கு ராஜதந்திரம் என்றால் என்ன என்று புரியத்தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
ஏன் பல பேர்களுக்கு ராஜதந்திரம் என்றால் என்ன என்று புரிவதில்லை என்றால் அவர்கள் வெளியில் சொல்லப்படும் காரணங்களில் திருப்தியடைந்து, அதை உண்மைதான் என்று நம்பிவிடுகிறார்கள். பிரச்சனைக்கான காரணம் இதுதான் நாம் எதையும் ஆழ்ந்து நோக்குவதில்லை.
நம் தமிழ் நாட்டு மக்களுக்கு மற்ற மக்களிடம் சில அவப்பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானவை, 1. முழுமையான கல்வித்தகுதியை நாம் இன்னும் அடைந்துவிடவில்லை, 2. எதையும் உழைக்காமல் இலவசமாகவே பெற்று வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டால் யாருக்கு அவமானம் அந்த குடும்பத் தலைவருக்குத்தானே அதுபோல தமிழ் மக்களுக்கு ஒரு கெட்ட பெயர் என்றால் நம்மை தலைமை தாங்குபவருக்குத்தானே அவமானம். ஆகவே அந்த அவப்பெயரை போக்க சில ராஜதந்திர திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்த ராஜதந்திர திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் எதையும் ஆழ்ந்து நோக்கும் பண்பில்லாத நம் மக்கள் வெளிப்படையான காரணங்களை மட்டும் கருத்தில் கொண்டு அரசு மீது அவதூறு பரப்பி வருகின்றார்கள். அது எந்த மாதிரியான ராஜதந்திரம்? எப்படி செயல்படுத்தப்படுகின்றது? ஏன் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது என்பதை பற்றி பார்ப்போம்.
கொஞ்ச நாளைக்கு முன்பு என்னுடைய மேலாளர் ஒரு வாழ்க்கை சூத்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அது என்னவென்றால் எந்த ஒரு குடும்பமும் மூன்று விதமான நிலைகளை அடைந்து அதன்பின் வீழ்ச்சியை சந்திக்கும் என்றார். உதாரணமாக:
1. தனிப்பட்ட ஒரு மனிதன் தன் கையில் பணம் ஏதுமில்லாமல் ஏழ்மையான நிலையில் இருக்கும் போது அவரின் சிந்தனை அன்றாட செலவுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும், வாடகை கொடுக்க வேண்டும், வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ரீதியில்தான் அமைந்திருக்கும். இந்த சிந்தனையை செயல்படுத்தி வாழ்வில் வெற்றியடைய அவர் விரும்புவார். இறுதியில் அவர் வெற்றியடையும் போது அவரின் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை அடைந்திருப்பார். இது முதல் நிலை வாழ்க்கை.
2. அடுத்ததாக அவரின் மகனின் வாழ்க்கை. தன் தந்தையின் சிரமம் மற்றும் உழைப்பை பார்த்து பழகிய மகனுக்கு பொருப்புணர்ச்சி அதிகமாக இருக்கும். பணத்தின் மதிப்பறிந்து செயல்படுவார். வீட்டு வாடகை மற்றும் அன்றாட செலவுகளுக்கு தன் தந்தை வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டதால் மகனின் சிந்தனை முழுவதும் தன் குடும்பத்திற்காக ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படுவார். இறுதியில் சொந்த வீடு கட்டும்போது அவரின் வாழ்க்கையும் முடிந்துவிடும். இது இரண்டாம் நிலை.
3. அடுத்ததாக பேரனின் வாழ்க்கை, இவனுக்கு அன்றாட செலவுக்கு பணம் இருக்கும், சொந்தவீடு இருக்கும் இவனுடைய கவலைகள் வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்கிப்போட்டு வசதிகளை பெருக்குவதைப் பற்றியதாக அமைந்திருக்கும். அந்த பேரன் அவனின் சிந்தனையை வெற்றிகரமாக செயல்படுத்தியதும் அவனின் குடும்பம் செல்வத்தின் உட்சத்தில் இருக்கும். இது மூன்றாம் நிலை இதற்கு பிறகு அந்த குடும்பம் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும். காரணம் என்ன வென்றால் அவனுக்கு பிறக்கும் மகனுக்கு எந்த கவலையுமில்லை எல்லாவசதிகளையும் பெற்றிருப்பான். ஆனால் அவனுக்கு பொறுப்புணர்ச்சி இருக்காது, கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாது. பணத்தின் மதிப்பு தெரியாது எனவே அவனின் மோசமாக செயல்பாடுகளால் அந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து கையில் காசில்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தாரே அந்த நிலையை அடையும் என்பது வாழ்க்கை விதி. ஒரு வேலை இறுதியாக வந்தவனும் பொருப்புணர்ச்சியோடு செயல்பட்டு மேலும் செல்வத்தை பெருக்கினால் அவனுக்கு ஆண் குழந்தை இல்லாமல் பெண்குழந்தை பிறக்கும் அவள் மூலமா அந்த பணம் வேறு குடும்பத்திற்கு சென்றுவிடும்.
இந்த விதியில் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் மூன்றாவது கட்டத்தை கடந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். நமக்கு கஷ்டம் என்றால் என்னவென்று தெரியவில்லை, பொறுப்புணர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. உழைக்கத் தயங்குகிறோம், சரியாக படிப்பதில்லை, பெண்கள் ஒன்பது மணிக்கு மேல் எழுந்திருக்கின்றனர்... இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் நம் குறைகளை. முன்பு இப்படியா இருந்தது தமிழகம்! மின்சார வசதி இல்லாத காலத்தில் தெரு விளக்கின் கீழ் அமர்ந்து படித்து தலைவர்களாக மாறி சாதித்தவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் நம் ஊரில்! இப்போது என்னவாகிவிட்டது நமக்கு!. இப்போது நம் வாழ்க்கை அளவுக்கு அதிகமாக வளமையை பெற்று விட்டது அதனால் நமக்கு அலட்சிய சிந்தனை அதிகமாகிவிட்டது.
வளம் குறைந்த பகுதியில் வாழும் மக்கள் வலிமையானவர்களாக இருப்பார்கள், வளம் அதிகமாக உள்ள பகுதியில் வாழும் மக்கள் வலிமையற்றவர்களாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான் ஆகவே நாம் இப்படி இருக்க நம் வளமையே காரணம். இந்த அவப்பெயர் நம்மை விட நம்மை தலைமை தாங்குபவரைத்தானே அதிகம் பாதிக்கும்! தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர் தாங்கிக்கொண்டு இருப்பாரா? இதை எப்படி சரி செய்வது? நமக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவது எப்படி என்று நம் அரசியல் அறிஞர்கள் அமர்ந்து யோசிக்கையில் கிடைத்ததுதான் மின்சார வெட்டுத்திட்டம் நம் வாழ்க்கை வளத்தில் அதிக பங்கு வகிக்கின்றது இந்த மின்சாரம். அதை குறைத்தால் என்ன! மக்களுக்கு தேவையான வளத்தை வடிகட்டிக்கொடுத்தால் என்ன! என்று யோசித்த ராஜதந்திரத்திற்கு கிடைத்தது மகத்தான வெற்றி. இருபத்தி நாலு மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்ற நிலை மாற்றி குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மின்சாரம் இயங்காது என்றதும் மயக்கத்தில் இருந்த மக்கள் மெல்ல மெல்ல இயங்கத்தொடங்கினார்கள். வெற்றிச் செய்தி வேந்தனை எட்டியதும் திட்டத்தை மேலும் விரிவாக்கி காலை மற்றும் மாலையிலும் மின்சார வெட்டு கொண்டுவந்தார்கள். அற்புதமான முடிவைக்கண்டார்கள் ஆனாலும் ஒரு குறை காலை மற்றும் மாலையில் மட்டும் மக்கள் உழைத்தால் போதுமா! எப்போதும் அந்த உணர்வு எழுச்சியோடு இருக்க வேண்டாமா! எனவே அந்த திட்டத்தின் தீர்ப்புகளை மாற்றி எந்த நேரத்தில் மின் வெட்டு செயல்படுத்தப்படும் என்று சொல்லாமல் கொள்ளாமல் செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.
 |
யோசித்துப்பாருங்கள் எப்போது மின்சாரம் நிறுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது. எனவே வேலையை தள்ளிப்போட யாருக்கும் மனம் வராது. காரணம் மின்சாரம் இல்லாத நிலையில் கடினமாக உழைப்பதை வீட இருக்கும் போதே செய்துவிடுவோம் என்ற சிந்தனை அனைவருக்கும் வந்துவிட்டது. எப்போதும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தன் தலை எழுத்தை தவறாக எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் வெளிச்சம் இருக்கும் போதே படித்துவிடுவோம் என்று படிக்கின்றார்கள். இப்படி ஆரம்பித்த இந்த பழக்கம் நாளடைவில் அவர்களை சிறந்த படிப்பாளியாக மாற்றியது. இந்த வருடம் எப்போதும் இல்லாததுபோல் எங்கள் ஊரில் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று தேறியிருக்கின்றார்கள். இதற்கு காரணம் என்ன?
காலை எட்டு மணிக்கு விடிந்து விட்டதா என கேட்டுக்கொண்டிருந்த எம் தமிழ் பெண்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து சமைக்கின்றார்கள். ஒரு சில நாட்கள் ஆறு மணிக்கு மின்சாரத்தை நிறுத்தினார்கள் ஒரு சில நாட்கள் ஏழுமணிக்கு, ஒரு சில நாட்கள் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கிறது. குழம்பிப்போன பெண்கள் எதற்கு பிரச்சனை என்று ஐந்து மணிக்கே எழுந்து வேலையை ஆரம்பித்துவிடுகின்றார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பெருகின்றனர். வேலை முடிந்துவிட்டது என்பதால் மன அமைதி பெருகின்றனர். இதற்கு கரணம் என்ன?
வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம், மாலையில் என்ன திரைப்படத்திற்கு செல்லலாம் எந்த நடிகன் நாளை நாட்டை ஆள வாய்பு இருக்கிறது என்று எப்போது நாட்டை பற்றியே சிந்தனை செய்து கொண்டிருந்த எங்க ஊர் ஆண்கள் மின்சாரம் கண்ணில் பட்டதும் வேலையை ஆரம்பித்து உழைக்கின்றார்கள். மின்சாரம் நிறுத்தப்படுவதற்கு முன்பாக வேலையை முடிந்துவிடுகின்றனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக அதிகம் சம்பாதிக்கின்றனர். அவர்கள் குடும்பம் நலமாக, வளமாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன?
அத்தனைக்கும் ஒரே காரணம் தான் சொல்ல முடியும் மின்சார வெட்டு. இருக்கும் போது யாருக்கும் அதன் அருமை தெரியாது. நிழலின் சுகம் வெயிலின் கொடுமையை உணர்ந்தால்தான் தெரியும். எனவே இந்த கொடுமை மக்களுக்கு அவசியம் ஆகின்றது. இதை நாம் குறை சொல்ல கூடாது. எங்க ஊரில் உள்ள சான்றிதழ் இல்லாத பட்டதாரிகள் காலம் காலமாக மாடு மேய்கின்றனர். குளிர்காலங்களில் மாடுகள் தண்ணீர் குடிக்காது இதனால் அந்த மாடுகளின் உடல் நலத்திற்கு கேடு ஏற்படும். இதை சரிசெய்ய அந்த மாட்டின் நாக்கை நன்றாக வழித்துவிட்டு காரத்தை ஏற்படுத்தும் ஏதாவது ஒன்றை அதன் நாக்கில் தடவிவிடுவார்கள். காரம் தாங்காமல் மாடு தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கும். இந்த சிறு கஷ்டம் எதற்காக அந்த மாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே. அது போல நம்முடைய நலன் கருதி சில சங்கடங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன.
இப்போது யாராவது சொல்லட்டுமே தமிழர்கள் உழைக்கவில்லை, படிக்கவில்லை, இலவசத்தை நம்பி வாழ்கின்றனர் என்று. இப்போது சொல்ல யாருக்கு துணிவிருக்கிறது. மக்கள் இந்த விசயத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட ராஜதந்திர முயற்சி இது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது புரியாத எதிர்க்கட்சிகள் தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது, நிர்வாகம் சரியில்லை என்று குறை கூறுகின்றனர். எதிர்கட்சி என்றால் குறை சொல்வது இயல்பு அதற்காக இப்படியா ஆழ்ந்து சிந்திக்காமல் ஒரு விசயத்தை குறை கூறுவது. தொலைக்காட்சி கொடுத்தவருக்கு அதை பார்க்க மின்சாரம் கொடுக்கத்தெரியாதா என்ன! இந்த நேரத்தில் தான் நாம் மனம் தளராமல் இருக்க வேண்டும்.
|
இவ்வளவு நகைச்சுவையான கட்டுரை படித்து மிக நீண்ட நாட்கள் ஆகிற்று.. பூபதி ஆரம்ப நிலையில் உங்கள் எழுத்துகளை விட இப்போது பின்னி எடுக்கிறீர்கள்..என்ன வஞ்சப் புகழ்ச்சி..
அனுப்பியவர் பாலா on Monday, 21.06.10 @ 10:23am
உங்கள் எழுத்தும், கட்டுரையும் உண்மையிலேயே ரசிக்கும்படியாக இருக்கிறது. இதற்கு மேல் யாரும் வஞ்சப் புகழ்ச்சி அணியை நாசுக்காக பயன்படுத்த முடியாது..
அனுப்பியவர் ரவிராஜா on Monday, 21.06.10 @ 10:38am
padithu mudithadhum vaaivittu sirithen. miga naiyandiyana eluthu vadivam ungaludayadhu. superbb thalaivare..
அனுப்பியவர் மித்ரன் on Monday, 21.06.10 @ 23:40pm
நண்பா. என்ன ஆகிவிட்டது உங்களுக்கு. அவன் அவன் மின்சாரம் இல்லாமல் பாடாய்ப் பட்டுக்கொண்டிருக்கிறான். ஒழுங்காக மின்சாரம் இல்லாமல்
விவசாயம் முதற்கொண்டு எல்லா தொழில்களும் பாதிக்கப் பட்டுஇருக்கு. இது நம் முன்னேற்றத்துக்கான ராஜதந்திரமா? ஏனய்யா இப்படி வயிற்றேரிச்சலை கொட்டிக் கொள்கிறீர்.?
சுப்ரமணியம்.
அனுப்பியவர் சுப்ரமணியம். on Tuesday, 22.06.10 @ 21:51pm
hello mr. subramaniyam i think boopathi naiyaandiyaaga eluthiyulaar. neengal en ivvalavu unarchi vasap padugireergal. idhu thaan tamilarin palaveename? naiyaadikkum, unmaikkum vitthiyaasam theriyavillaiye?
அனுப்பியவர் Yadhav on Wednesday, 23.06.10 @ 03:01am
idhai vida ivargalai yaarum asingamaagath thitta mudiyaadhu.. saukkadi to arasaangam. good boopathi.
அனுப்பியவர் Rajan on Wednesday, 23.06.10 @ 03:33am
Nertthiyagavum, nermaiyagavum ulladhu katturai.
அனுப்பியவர் Kandhan on Wednesday, 23.06.10 @ 03:36am
tamilil oru nalla naiyaadi eluthaalar uruvaagi varugiraar. migizhchiyaaga irukiradhu. valthugal.
அனுப்பியவர் Pandiyan on Sunday, 27.06.10 @ 23:16pm